சோதனையில் சாதனை!

எதிரிகள் வரவைத் தடுக்க, போர்களைப் புறக்கணிக்க மதீனா எல்லையில் அகழ் வெட்டினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும்
சோதனையில் சாதனை!
Updated on
2 min read

எதிரிகள் வரவைத் தடுக்க, போர்களைப் புறக்கணிக்க மதீனா எல்லையில் அகழ் வெட்டினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும். அகழ் தடுப்பையும் மீறி சீறி வந்த எதிரிகளோடு "உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால் நீங்கள் எல்லை கடந்து விடவேண்டாம். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுவோரை நேசிப்பதில்லை'' என்ற திருக்குர்ஆனின் 2-190 ஆவது வசனப்படி நபிகள் (ஸல்) அவர்கள் புரிந்த போரே அகழ்ப் போர்.

அகழ்ப் போர் நடந்தபொழுது போர் வீரர்களோடு வந்த பெண்கள், குழந்தைகள் போர்க்களத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு கோட்டையில் தங்கினர். அக் கோட்டைக்கு ஹஸ்ஸôன் இப்னு தாபித் (ரலி) அவர்கள் காவலிருந்தார்கள்.

எதிரிப் படைகளைச் சேர்ந்த பனூகுரைலா கூட்டத்தினர் கோட்டையை கடந்து சென்றனர். அக்கூட்டத்தில் ஒருவன் நின்று நிதானித்து கோட்டையில் பெண்களும் குழந்தைகளும் உள்ளதைக் கண்காணித்தான்.

அவன் திரும்பி சென்று பனூகுரைலா கூட்டத்தை அழைத்து வந்து தாக்கும் அபாயம் உள்ளதை உணர்ந்த உத்தம நபி (ஸல்) அவர்களின் அத்தையும் ஹழ்ரத் ஹம்ஜா (ரலி) அவர்களின் சகோதரியுமான சபிய்யா (ரலி) அவர்கள் நோட்டம் பார்ப்பவனைத் தாக்குவது பற்றி தாபித் (ரலி) அவர்களிடம் ஆலோசனை கேட்டார்கள்.

அவரோ அவனைத் தாக்கினால் அவனின் அலறல் கடந்து சென்ற எதிரிக் கூட்டம் திரும்பி வந்து தாக்க வழிவகுத்துவிடும் என்று தாக்குவதைத் தடுத்தார்.

"நோட்டம் பார்ப்பவன் கூட்டத்தைக் கூட்டிவர மாட்டானா? அப்பொழுது ஆபத்து வராதா?'' என்ற சபிய்யா (ரலி) அவர்களின் கேள்விக்குப் பதிலிறுக்காமல் மௌனம் காத்தார் தாபித் (ரலி) அவர்கள்.

"ஒவ்வொரு செயலையும் தங்களுக்குள் ஆலோசனை செய்வார்கள்'' என்ற திருக்குர்ஆனின் 42 -38 ஆவது வசனப்படி ஆலோசித்ததில் அபாயம் அகற்றும் வழி காணப்படவில்லை. மேலும், ஆலோசிக்க அவகாசமும் இல்லை; வேறு யாருமில்லை.

தலைக்குமேல் ஆபத்து. தாமதம் அப்பாவி பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட காரணம் ஆகிவிடும். ""நம்பிக்கையாளர்களே! எதிரிகளிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள்'' என்ற திருக்குர்ஆனின் 4-171 ஆவது வசனமும், ""அநியாயத்தில் சிக்கி நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் எதிர்களை எதிர்த்து போர் புரிய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது'' என்ற 22-39 ஆவது வசனமும் சபிய்யா (ரலி) அவர்களைத் தாமதிக்காது மிக்க கவனமுடன் தக்கன செய்ய தூண்டின.

சபிய்யா (ரலி) அவர்கள் கூடார கம்பு ஒன்றைத் தூக்கி உயரே உற்று பார்த்துக் கொண்டிருந்தவன் சற்றும் எதிர்ப்பாராத நிலையில் தலையில் ஓங்கி அடித்தார்கள். திடீர் தாக்குதலைத் தாக்குபிடிக்க முடியாமல் அலறாது விழுந்து உயிர் நீத்தான் அப்பாவி பெண்களைத் தப்பாது கொல்ல தருணம் பார்த்தவன்.

பெண்புத்தி பின்புத்தி அல்ல. பின்வரும் பேராபத்தை முன்னரே சிந்தித்து அயராது முயன்று செயலாற்றி ஓருயிரைக் கொன்று ஒரு நூறுக்கு மேற்பட்ட உயிர்களைக் காத்த உத்தமி சபிய்யா (ரலி) அவர்களை வரலாற்றாசிரியர் இப்னு அதீர் முதல் முஸ்லிம் வீராங்கனை என்று பாராட்டுகிறார்.

எகிப்து மன்னன் பிர்அவ்ன் அவனின் மனைவி ஆஸியாவிடம் ஆலோசனைக் கேட்பான். ஆஸியா அம்மையார் மூசா நபியைப் பின்பற்றி பேராபத்திலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற ஆலோசனை கூறுவார். பின்னர் பிர்அவ்ன் அவனின் அமைச்சர் ஹாமானிடம் ஆலோசனை கேட்பான். ஹாமானோ பெண்புத்தி பின்புத்தி என்றுரைத்து ஆஸியா அம்மையாரின் அறிவுரையை செயலாற்றாது தடுத்து விடுவான். ஆஸியா அம்மையாரின் அறிவுரையை புறந்தள்ளியதால் பிர்அவ்னும் அவனின் படையினரும் நைல் நதியில் மூழ்கி மாண்டனர்.

மதீனாவிலிருந்து ஹஜ் செய்வதற்கு மக்காவிற்குப் புறப்பட்ட பூமான் நபி (ஸல்) அவர்களையும் அவர்களுடன் சென்றவர்களையும் குறைஷியர்கள் ஹீதைபிய்யா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தினர். ஏறத்தாழ இருபது நாட்கள் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு, அந்த ஆண்டு ஹஜ் செய்யாது மதீனாவிலிருந்து வந்தவர்கள் மதீனா திரும்ப வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஒப்பந்தப்படி ஹீதைபிய்யாவில் குர்பானி கொடுத்து விட்டு ஹஜ்ஜீக்காக அணிந்த இஹ்ராம் உடையை மாற்றிக் கொள்ள மாநபி (ஸல்) அவர்களின் அறிவிப்பினைக் கேட்டு திகைத்து நின்றனர் மிகைக்காது செயல்படும் செம்மல் நபிகளாரின் தோழர்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவி மாநபி (ஸல்) அவர்கள் அறிவித்தபடி அவர்கள் முதலில் குர்பானி கொடுத்து இஹ்ராம் உடையை மாற்றினால் உற்ற நபிகளாரின் உத்தம தோழர்கள் சத்திய நபிமொழியைச் சற்றும் தயங்காது முற்றிலும் பின்பற்றுவர் என்று ஆலோசனை கூறினார்கள்.

அன்னை உம்மு சல்மா (ரலி) அவர்களின் ஆலோசனைப்படி மேன்மை மிகு நபிகளார் நடந்திட தோழர்களும் அவ்வாறே செய்து அனைவரும் அமைதியாக மதீனா திரும்பினர். ஒரு பெண்ணின் புத்தி போதனையால் சோதனையில் சாதனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com