உலகத்தில் பிறக்கும் மனிதன் எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் வந்து, இருந்து மறைந்து போகிறானே என்று வருந்திய பரமஹம்சர் ஓரு கதை சொன்னார்.
ஓர் ஊரில் நாடகம் நடக்க இருப்பதாக அறிவித்தார்கள். நாடகம் பார்க்க வேண்டும் என்று விரும்பிய ஒருவன் அந்த ஊருக்குப் போனான். கையில் ஒரு பாயும் வைத்திருந்தான்.
போன இடத்தில் நாடகம் தொடங்கச் சிறிது நேரம் ஆகும் என்று சொன்னார்கள்.
அவன் உடனே தன் கையில் இருந்த பாயை எடுத்துத் தரையில் விரித்தான்; சிறிது நேரம் படுக்கலாம் என்று படுத்தான்; படுத்தவன்தான்; அப்படியே நன்றாகத் தூங்கி விட்டான். நாடகம் தொடங்கி, நடந்து முடிந்து, விடியற்காலம் ஆகி விட்டது. கூடியிருந்த ஜனங்கள் கலைந்து அவரவர் இருப்பிடம் நோக்கிக் கலைந்தார்கள்.
விழித்துப் பார்த்தான் இந்த மனிதன். அடடே, நாடகம் முடிந்து விட்டதே என்று முணுமுணுத்துக் கொண்டே, பாயைச் சுருட்டிக் கையில் பிடித்துக் கொண்டு ஊருக்குப் போய்ச் சேர்ந்தான்.
இப்படித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வீணே கழிந்து கொண்டிருக்கிறது!