பிறர் நலம் பேணும் பேராண்மை!

தனக்கு மிஞ்சி தான் தான தருமம் என்பது சுய நலத்தைச் சுட்டி காட்டும். ஈட்டுவதெல்லாம் ஈவதற்கே என்பது பிறர் நலம் பேணும் பேராண்மை.
Updated on
2 min read

தனக்கு மிஞ்சி தான் தான தருமம் என்பது சுய நலத்தைச் சுட்டி காட்டும். ஈட்டுவதெல்லாம் ஈவதற்கே என்பது பிறர் நலம் பேணும் பேராண்மை.  இப்பேராளர்கள் ஏராளமாய் தேடி தாராளமாய் வழங்குவர். உயிர் பிரியும் தருணத்தில் கூட தனக்கென தரப்பட்டது அடுத்தவருக்குத் தேவை என்றால் கடுத்த முகம் காட்டாது அடுத்தவர்களுக்குக் கொடுத்து ஆனந்தம் அடைவர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் கலீபாக்களின் ஆட்சியில் ஷாம் நாட்டில் யர்முக் என்ற இடத்தில் ரோமர்களோடு நடந்த போரில் காயமுற்ற, குற்றுயிராய் துடித்துக் கொண்டிருந்த வீரர்களுக்கு நீர் கொடுக்கச் சென்ற ஹீதைபத்துல் அதவீ (ரலி) அவர்களின் சிறிய தந்தையின் மகன் துடிப்பதைப் பார்த்து துடித்து ஓடினார். அடிபட்டவரும் தலையசைத்து நீர் கேட்டார்; அவருக்குப் பக்கத்தில் பலத்த காயத்துடன் புலம்புபவருக்கு நீர் கொடுக்க நீள் கண்களை அசைத்து சாடை காட்டினார். அவர் ஹீஷாமுப்னுல் ஆஸ் என்பதறிந்து நீரை நீட்டும் பொழுது ஆஸ் அவரின் அருகில் அவதிப்படுபவருக்கு நீர் கொடுக்க சைகை செய்தார். மூன்றாவது மனிதரை நெருங்கும் பொழுது அவரின் உயிர் பிரிந்தது. திரும்பி ஹிஷாமிடம் வந்த பொழுது அவர் இறந்து விட்டார். அடுத்து அவரின் சகோதரரைச் சந்திக்கும் முன் அவரும் சஹீதாகி விட்டார். (நாட்டிற்காக உயிர் துறப்பது) உயிர் போகும் தருணத்திலும் பிறருக்குதவும் பெருங்குணத்தால் மூவரில் ஒருவரும் நீர் பருகாமல் நீளுலக வாழ்வை நீத்தனர்.

"இன்னும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலிருந்து எந்த தேவையையும் தங்களுடைய இருதயத்தில் காண மாட்டார்கள். இன்னும் தங்களுக்குத் தேவை இருந்தாலும் தங்களைத் தியாகம் செய்வார்கள். மேலும் எவர் தன்னுடைய உள்ளத்தின் கஞ்சத்தனத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டாரோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்'' என்ற குர்ஆனின் 59-9 வது வசனத்தை மெய்ப்பித்த மெய்யடியார்கள் இந்தியாகிகள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜகாத் திறை பொருள்களிலிருந்து வழங்கிய அன்பளிப்பை உமர் (ரலி) தேவையுள்ளவர்களுக்குக் கொடுக்க கோரிய பொழுது அண்ணலார் அன்பளிப்பை மறுக்காமல் ஏற்று, ஏற்புடையவர்களுக்கு அளித்திட அனுமதித்தார்கள் என்ற செய்தியை உமர்(ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் (ரலி) அறிவிப்பதை முஸ்லிம், நஸஈ நூற்களில் காணலாம்.

இனிய நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவுரைக்குப் பின் அண்ணல் நபிகளாரின் அருமை தோழர்கள் அன்பளிப்புகளை மறுக்காமல் பெற்று தேவையானவர்களுக்கு வழங்குவார்கள்.

மக்காவிலிருந்து அபயம் தேடி மதீனாவிற்கு வந்த மக்கத்து இஸ்லாமியர்களை ஆதரித்த மதீனத்து முஸ்லிம்களுக்கு அன்சாரிகள் என்று பெயர். அன்சாரி ஒருவருக்கு ஆட்டுத்தலை அன்பளிப்பாக கிடைத்தது. அடுத்த வீட்டுக்காரர் ஆட்டுத்தலையை விரும்பி சாப்பிடுவார் என்று அடுத்த வீட்டிற்கு அனுப்பினார். அடுத்த வீட்டுக்காரரோ அண்டை வீட்டுக்காரர் விரும்பி சாப்பிடுவார் என்று அவருக்கு அனுப்பினார். இப்படி ஒவ்வொருவரும் மற்றவர் விருப்பத்தை நிறைவேற்ற பக்கத்து வீடுகளுக்கு அனுப்ப அப்பகுதியில் உள்ள ஏழு வீடுகளுக்கும் சென்ற ஆட்டுத்தலை மீண்டும் முதல் வீட்டு அன்சாரிக்கே வந்தது. இச்செய்தியை அப்துல்லா ஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆசை மிக அருமையாய் சமைத்து சுவையோடு சாப்பிடும் உணவு பொருட்களையும் பொறுப்போடு பிறருக்குத் தரும் தன்மையின் நன்மையை நாடி பெற்றவர்கள் நந்நபி (ஸல்) அவர்களின் நற்றோழர்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று, பகரமாக பரிசுகள் அனுப்பியதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூற்களில் உள்ளது.

அன்பளிப்புகளை ஏற்றும் பகரமாக அளித்தும் பரஸ்பர பரிமாற்ற வழியில் பாசப்பிணைப்பை ஏற்படுத்திய ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் பகிர்ந்துண்பதையும் அதிக பொருட்கள் உள்ளவர் இல்லாதோரிடம் பங்கிட்டு கொள்வதையும் ஊக்குவித்தார்கள். ஏழைகளின் ஏக்கம் தீர்த்தார்கள்; எல்லாரும் எல்லாமும் பெற ஆக்க வழியைக் காட்டினார்கள்; செல்வ தேக்கத்தைப் போக்கினார்கள்.

ஒரு பயணத்தில் அமர்ந்திருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்த ஒருவர் வல பக்கமும் இட பக்கமும் திரும்பித் திரும்பி பார்த்தார். அப்பார்வையின் பொருளுணர்ந்த அருள்நபி (ஸல்) அவர்கள் யார் யாரிடம் அதிக பொருட்கள் உள்ளதோ அவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று ஏவியதை எடுத்துரைப்பவர் ஹழ்ரத் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்- முஸ்லிம்.

அஸ் அரி கூட்டத்தினர் ஒரு குடும்பத்தில் உண்வு குறைந்து விட்டால் ஒவ்வொருவரிடமும் உள்ள உணவை ஒரு துணியில் ஒன்று சேர்ப்பார்கள். பின் அவர்களின் பாத்திரங்களில் சமமாகப் பங்கு பிரித்து கொள்வார்கள் என்ற செய்தியைச் செப்பியவர் அபூமூஸô (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம்.

தூதர் நபி (ஸல்) அவர்கள் போதித்த நீதிகளையும் கடைபிடித்து பாதித்த மக்களுக்குப் பயனுள்ள முறையில் முன்வந்து உதவி உறவை வளர்த்து நட்பைப் பெருக்கி நாடு உயர உண்மையாய் நன்மை செய்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com