இறைவனின் கருணையாக, வாழ்த்தாக நலமுடன் வாழ வழங்கப்படுவதுதான் பிரசாதம்! ஆனால் கோபப் பிரசாதம் எனும் சொல்லை கோவை கவியரசு கு. நடேசக் கவுண்டர் இயற்றிய "பழனியாண்டவர் மயில்விடு தூது'வில் பயன்படுத்துகிறார். அதென்ன கோபப் பிரசாதம்?
முருகப் பெருமானின் செயல்களைக் குறிப்பிடுகையில் அவன் அருள்கொண்டு செய்யும் செயல்பாடுகளையும், அவன் கோபங்கொண்டு செய்யும்
செயல்களையும் கோபப் பிரசாதங்களாகக் குறிப்பிடுகிறார். அவை, முருகனின் மறக்கருணை, அறக்கருணை ஆகும்.
இந்நூலில், முருகப்பெருமானைத் தரிசிக்கப் பழனிமலையில் ஏறும் பக்தர்கள் அவனின் வீரச் செயல்களைக் கூவிக்கொண்டே படியேறுகின்றனர். முன்பொரு சமயம், பிரணவத்தின் பொருள் அறியாமல் இருந்த பிரம்மனைத் தலையில் குட்டி சிறையில் அடைத்த செயல்; தன்னைக் கொல்வதற்காக முனிவன் ஒருவன் செய்த தவத்தில் இருந்து பிறந்துவந்த ஆட்டுக் கிடாவை அடக்கித் திருமாலுக்கு ஆயுதமாக வழங்கிய செயல்; கிரௌஞ்ச மலை வடிவில் வந்த தாருகாசுரனை மலையைப் பிளந்து வதைத்த செயல்; சூரபதுமனை வென்று கொன்ற செயல் போன்றவை மறக்கருணையால் விளைந்த பிரசாதங்கள்.
கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தபோது, சிவன் "ஓம்' மந்திரத்தை உபதேசித்தது; மலைக்குகையில் சிறைப்பட்ட நக்கீரரின் திருமுருகாற்றுப்படையை கேட்டு உருகி அவரைக் கொல்ல நினைத்த பூதத்தைக் கொன்றது; பெண்ணொருத்தியின் வெட்டுண்டக் கையை வளரச் செய்தது; அருணகிரியாரின் தொழுநோயை நீக்கி அவரை உலகம் புகழும் திருப்புகழ் பாடவைத்தது; பாரபட்சமின்றித் தன்னிடம் அன்பு கொண்ட அனைவருக்கும் அருள் புரிவது போன்றவை அறக்கருணையால் விளைந்த பிரசாதங்கள்.
முருகப்பெருமானின் இச்செயல்களைக் கோபப் பிரசாதங்கள் என்று இந்நூல் அழகுறப் பாடுகிறது.