ஏதிலார் ஏதம் ஏளனமல்ல!

என் குறைகளைத் தானே அறிந்து திருத்திக் கொள்பவர் பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தி பேசமாட்டார்கள்
Updated on
2 min read

என் குறைகளைத் தானே அறிந்து திருத்திக் கொள்பவர் பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தி பேசமாட்டார்கள். தன் குறையைத் தானும் அறியாது பிறர் எடுத்துக் கூறினும் கடுகளவும் கருத்தில் கொள்ளாதோரும் குற்றங்களைக் களைந்திட விரும்பாது திரும்பத் திரும்ப அக் குறையைக் குறைக்காது செய்வோரும் பிறரின் குறையைப் பரிகாசம் செய்வதில் வல்லவர்களாக விளங்குவார்கள். இத்தகைய குணமுடையவர்கள் எக்காலத்திலும் எல்லா சமூகத்திலும் இருப்பர்.

உம்முஸல்மா (ரலி) அவர்கள் அழகிய பெண். ஆனால் குள்ளமானவர். அண்ணல் நபி( ஸல்)அவர்களின் மற்றைய மனைவிகள் உம்முஸல்மா (ரலி) அவர்களின் குள்ள உருவத்தைக் குறை கூறி குள்ளமாக இருப்பது அவர்களின் அழகைக் குறைப்பதாக கேலி செய்வர்.

மா நபி (ஸல்) அவர்கள் மக்காவைக் கைப்பற்றிய பிறகு இஸ்லாமியர்களுக்கு இடையறாது இன்னல் புரிந்த கொடியவன் அபூஜஹ்லுடைய மகன் இக்ரிமா இஸ்லாத்தை ஏற்றார். அவரை மதீனாவில் கண்ட முஸ்லிம்கள் ""இக்கால பிர்அவ்னின் மகன்'' என்று தூற்றினர். போற்றத் தக்க புண்ணிய பூமான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு இழித்துரைத்தோரைக் கண்டித்தனர். அப்பொழுது ""நம்பிக்கையுடையோரே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்டவர்கள் அல்லாஹ்விடத்தில் மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். கேலி செய்யப்பட்டவர்கள் மேலானவர்களாக இருக்கலாம். ஒருவர் மற்றவரை இழிவாகக் கருதி குறை கூற வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்குத் தீய பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டபின் கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்டதும் பாவமானதுமாகும். எவர் இவற்றிலிருந்து விலக வில்லையோ அவர்கள் அநியாயக்காரர்கள்'' என்ற திருக் குர்ஆனின் 49-11 வது வசனம் அருளப்பட்டது.

இவ்வசனம் இறங்கியதும் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ""நான் ஒரு நாயைப் பரிகசித்தாலும் நான் ஒரு நாயாக மாறி விடுவேனோ? என்று அஞ்சுகிறேன்'' என்று கூறினார். ஒரு படைப்பைப் பரிகசிப்பது அவ்வாறு படைத்தவனையே பரிகசிப்பது போலாகும்.

மருத்துவ மேதை லுக்மான் அழகற்றவர். அவரைப் பரிகசிப்பவர்களிடம் ""நீங்கள் என்னைப் பழிக்கிறீர்களா? என்னைப் படைத்தவனைப் பழிக்கிறீர்களா?'' என்று கேட்பார்.

குறையில்லாத நிறையுடையவன் இறைவன் மட்டுமே. மனிதர்கள் குறையுடையவர்களே. ஒருவரிடமுள்ள அதே குறை மற்றொருவரிடம் இல்லாதிருப்பினும் முன்னவரிடமில்லாத வேறொரு குறை பின்னவரிடம் இருக்கும். இதுதான் மனித குலத்தின் மகிமை. இதையுணராது பிறரைப் பழிப்பது பேதமை.

ஒருவரின் அல்லது அவரின் முன்னோர்களின் குறையை, குற்றத்தை, தவறைச் சுட்டிக் காட்டும் இழிவான பட்டப் பெயர்களைச் சூட்டி கேலியாய், கேவலமாக, அவதூறாக அழைத்து அவமதிப்பது மன்னிக்க முடியாத குற்றம். மாநபி (ஸல்) அவர்கள் வழியல்ல.

ஆனால் ஒரு மனிதனை அவனின் நற்குணங்களை, நல்லியல்புகளை, நற்றொண்டை பொற்புடைய பெயர்களால் அழைப்பது சகோதர பாசத்தைத் தழைக்க செய்யும்.

ஏதிலார் ஏதம் ஏளனமல்ல. ஏதிலார் ஏதம் காணல் தீது. கண்டதை விண்டுரைத்து வீணான சண்டையை உண்டு பண்ணுவது, உறவைத் துண்டிப்பது, ஊரை இரண்டாக்கி பலரைத் தண்டனைக்குள்ளாக்குவது தீதினும் தீது. தீதகற்றி நீதி போற்றி நிம்மதியாய் வாழ்வோம். நிறையுடைய இறைவனை நித்தமும் தொழுது சத்திய வழியில் சமுதாய ஒற்றுமையைக் காப்போம். நாட்டின் ஒருமைப்பாட்டை ஓங்க செய்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com