

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண' என்று முதலடி எடுத்துக்கொடுத்து அருணகிரிநாதரை ஆட்கொண்டான் ஆறுமுகப்பெருமான். திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு பலதலங்களில் முருகப்பெருமானது திருப்புகழைப் பாடிவரும் வழியில் ஞானமலை என்னும் தலமுருகனைத் தரிசிக்கிறார் அருணை முனிவர். திருவண்ணாமலையில் தம்மை ஆட்கொண்டு திருவடி தரிசனம் அளித்ததை நினைவு கூர்ந்து ஞானமலையிலும் அதனை வேண்ட அவ்வாறே திருவடிக் காட்சி தந்து அருள்பாலிக்கும் கந்தவேள், யோகாநுபதி உபதேசிக்கிறார். இப்படி அருணகிரிநாதர் அருள்பெற்ற ஞானமலைக்கு நாமும் சென்று தரிசிக்கலாம்... வாருங்கள்...!
1997 ஆம் ஆண்டுவரை இந்த ஞானமலையின் இருப்பிடம் யாருக்குமே தெரியாமல் இருந்துவந்தது. 1998 ஆம் ஆண்டில் தினசரி செய்தித்தாளில் அச்சான கல்வெட்டு செய்தி ஞானமலையை உறுதிசெய்தது. அதைக் கொண்டு அம்மலைக்குச் சென்று ஆய்வு செய்ததில் பல அரிய செய்திகள் கிடைத்தன.
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், கோவிந்தச்சேரி என்ற கிராமத்தில் ஞானமலை அமைந்துள்ளது. சென்னை வேலூர் சாலையில் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் மங்கலம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது ஞானமலை. இம்மலையில் அருள்பாலிக்கும் ஞானவள்ளி, ஞான குஞ்சரி சமேத ஞானபண்டித சுவாமி பல்லவர் காலத்து அரிய விக்ரஹம். பிரம்ம சாஸ்தா கோலம். முருகன் வள்ளிமலையில் வள்ளியை மணந்து அவளுடன் திருத்தணி வரும் வழியில் ஞானமலையில் தேன்நிலவை கொண்டாடினாராம். வேதமும் காணாத வேலவனின் திருப்பாத சுவடு ஞானமலையில் காணும் போது நம்மை மெய்சிலிர்க்கவைக்கிறது. இங்கே அருணகிரிநாதருக்கு திருவடிக் காட்சியளித்ததற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? ஞானவெளி சித்தர் என்னும் பாலை சித்தர் சமாதியின் மேல் ஞானகிரீச்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது அற்புதமாகும்!
இப்படிப் பெருமை வாய்ந்த திருப்புகழ் திருத்தலத்தை முருகனடியார்கள் சென்று வழிபட்டு அருள்பெறவேண்டும் என்ற முயற்சியில் ஞானாச்ரமம் அறக்கட்டளை (பதிவு) சார்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. மலைமேல் செல்ல செம்மையாக படிகள் உண்டு.
நித்யபூஜை மற்றும் கோயில் உற்சவங்கள் நடைபெற வழிசெய்துள்ளது. மலைமேல் குடிநீர் வசதி, சுவாமியின் திருப்பாதம் அமைந்துள்ள இடத்தில் அடியார்கள் அங்க பிரதட்சணம் மற்றும் தியானம் செய்ய வசதியாக திருவடிப் பூங்கோயில் தியான மண்டபமும், மலைப்படியில் ஏறியவுடன் இளைப்பாற அருணகிரிநாதர் யோகாநுபதி மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஞானமலைக் கோயிலில் வேல் பூஜை, லட்சார்ச்சனை, சுவாமி திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை மற்றும் ஆலய திருவிழாக்கள் நடைபெறவும், அன்னதானம் திருமணம் போன்ற பொதுமக்கள் நிகழ்ச்சிகளுக்காகவும் கோயிலின் தென்புறம் (2112 சதுரஅடி) அளவில் முருகன் திருவருள் துணைகொண்டு ஞானவேல் மண்டபம் திருப்பணி தொடங்கியுள்ளது.
திருப்புகழ் அடியார்கள், ஆன்மிக பெருமக்கள் இத்திருப்பணியில் பங்கு பெற்று முருகப்பெருமானின் அருள் பெறலாம்.
தொடர்புக்கு : ஞானாச்ரமம் அறக்கட்டளை (பதிவு) 94444 18526/ 90032 32722.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.