

திருஞானசம்பந்தர் சொல்லக்கூடிய தர்மநெறியும் வேதநெறியும் சிவநெறியும் புறச்சமயத்தாரிடத்தில் பொறாமையை உண்டு பண்ணின.
அனல்வாதம் செய்ய வேண்டுமென அவர்கள் விழைந்தனர். இருபக்கத்து வாதங்களையும், கருத்துக்களையும் நெருப்பில் இடுவது; எது மெய்ம்மையோ, அது எரிக்கு அழியாமல் தங்கும் - இதுவே அனல்வாதம்.
அனல்வாதம் செய்வதை ஏற்றுக்கொண்ட திருஞானசம்பந்தர், நெருப்பின் அருகில் போய் நின்றார். அவருக்குப் பக்கத்தில் சரணாலயர் என்னும் எழுத்தர் நின்றார். சரணாலயரிடமிருந்த தன் தேவாரப் பாடல்களின் சுவடிக்கட்டிலிருந்து ஒரு சுவடியை உருவினார். திருநள்ளாறு திருத்தலத்தின் ஈசன்மீது பாடிய "போகமார்த்த பூண் முலையாள்' என்ற பதிகம் வந்தது. உடனே நள்ளாற்றுப் பெருமானை உள்ளத்துள் தியானித்து ஒரு பதிகம் பாடினார். பின்னர் "போகமார்த்த பூண் முலையாள்' பதிகம் உள்ள ஏட்டினை அப்படியே நெருப்புக்குள் போட்டார்கள்.
ஏடு எரியாமல் அப்படியே பச்சையோலையாய் பரிமளித்தது. பச்சையாய் ஏடு நின்றதால், "போகமார்த்த பூண் முலையாள்' பதிகம் பச்சைப் பதிகம் எனப் பெறுகிறது.
(அனல் வாதம் நடைபெற்ற இடம் - பாண்டியத் தலைநகர் மதுரை)
திருநள்ளாற்றுப் பச்சைப் பதிகம்
"போகம்ஆர்த்த பூண்முலையாள்
தன்னோடும் பொன்னகலம்
பாகம்ஆர்த்த பைங்கண்வெள்
ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகம்ஆர்த்த தோலுடையன்
கோவண ஆடையின்மேல்
நாகம்ஆர்த்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.''
திருஆலவாயில் (மதுரையில்) அனல்வாதத்தின்போது ஞானசம்பந்தர் பாடிய பதிகம்
"தளிர்இள வளர்ஒளி தனதுஎழில் தருதிகழ் மலைமகள்
குளிர்இள வளர்ஒளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளர்ஒளி மருவுநள் ளாறர்தம் நாமமே
மிளிர்இள வளர்எரி யிடில்இவை பழுதிலை மெய்ம்மையே.''
திருநள்ளாறு தலத்தினைச் சென்றடையும் வழி
காரைக்கால் - கும்பகோணம் சாலையில் காரைக்காலிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.
இறைவன் - தர்ப்பாரண்யேசுவரர், திருநள்ளாற்றீஸ்வரர்,
இறைவி - பிராணாம்பிகை, பிராணேஸ்வரி, போகமார்த்த பூண்முலையாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.