இந்துமத அற்புதங்கள் 52: திருக்கதவம் தாழ் திறவாய்!

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில்
இந்துமத அற்புதங்கள் 52: திருக்கதவம் தாழ் திறவாய்!
Updated on
1 min read

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் தங்கி இறைவனை வழிபட்டார்கள். அந்த ஊர் திருக்கோயிலில் மக்கள் நேர்வாசல் வழியாகச் செல்லாமல்,  அருகிலிருந்த திட்டிவாசல் வழியாகச் செல்வதைக் கண்டார்கள்.

முன்னொரு காலத்தில் நான்கு வேதங்களும் வந்து ஈசனை வழிபட்டுச் சென்றார்களாம். அப்படி வந்து வழிபட்ட காலத்தில், வேதங்கள் கோயில் கதவைத் திருக்காப்பு செய்துவிட்டுப் போனதாகவும்,  மீண்டும் வேதங்களே வந்துதான் திருக்காப்பு நீக்க வேண்டுமென்றும், அவ்வாறு வேதங்கள் வராததால், மக்கள் நேர்வாசலைப் பயன்படுத்தாமல் திட்டிவாசலையே பயன்படுத்துவதாகவும் அவ்வூர் மக்கள்  தெரிவித்தார்கள்.

இதென்ன, இறைவனை வணங்கும் செயலைப் பெருமிதத்தோடு செய்யாமல் ஏதோ தவறு செய்வதுபோல் திட்டிவாசல் வழியாகச் செய்வது என்று எண்ணிக் கலங்கினார்கள் பெருமக்களான நாவுக்கரசரும்,  சம்பந்தரும்!

திருஞானசம்பந்தர், நாவுக்கரச பெருமானை வேண்டிக் கொண்டார். ""அப்பரே! திருக்கதவம் திருக்காப்பு நீக்கப் பாடுங்கள்!'' என்றார்.

திருநாவுக்கரசராம் அப்பர் பெருமானும் பதிகம் பாடினார். கதவு திறந்தது.

திருமறைக்காட்டில் திருக்கதவம் அடைக்கப் பாடிய பதிகம்

"பண்ணின் நேர்மொழி யாள்உமை பங்கரோ

மண்ணி னார்வலம் செய்ம்மறைக் காடரோ

கண்ணி னால்உமைக் காணக் கதவினைத்

திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.''

திருமறைக்காடு தலத்தினைச் சென்றடையும் வழி:

கும்பகோணம், மயிலாடுதுறை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் முதலிய ஊர்களிலிருந்து செல்லலாம். தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது.

இறைவன் - மறைக்காட்டீசுவரர், வேதாரண்யேசுவரர், வேதவனேசர், வேதாரண்யநாதர், இறைவி - வீணாவாத விதூஷணி, யாழைப் பழித்த மொழியம்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com