திருப்புமுனை தரும் திரிசூலநாதர்!

சென்னையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள திரிசூலத்தில் ரயில் நிலையம் அருகே,
திருப்புமுனை தரும் திரிசூலநாதர்!
Updated on
2 min read

சென்னையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள திரிசூலத்தில் ரயில் நிலையம் அருகே, மலைகளுக்கு நடுவே திரிசூலநாதர் திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. உயரப் பறப்பதற்கு உதவும் விமானத்தைப்போல, வாழ்க்கையில் உயரத் துடிக்கும் பக்தர்களுக்கு உதவக் காத்திருக்கிறேன் என்பதே இறைவன் சொல்லாமல் சொல்வதைப்போல இந்த ஆலயத்தின் அமைவிடச் சிறப்பு அமைந்துள்ளது.

இறைவன் சிவபெருமான் புதுமைக்குப் புதுமையாய் பழைமைக்குப் பழைமையாய் திகழ்பவன். அதிநவீன விமான நிலையத்துக்கு எதிரே சிவபெருமான் வீற்றிருக்கும் இந்த ஆலயமும் மிகவும் பழைமையானது. தொன்மை வாய்ந்த திரிசூலம் மலையை ஒட்டியுள்ள பல்லாவரம் பகுதியில் கடந்த 1863 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. அத்தகு திரிசூலத்தில் நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே திரிசூல நாதர் கோயில் உள்ளது.

இந்த நான்கு மலைகளும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. வேதத்தின் உட்பொருளாக அதன் நடுவே சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். இந்த சிவ ஸ்தலத்தை தனது ஆணவம் அடங்கும் பொருட்டு பிரம்மா நிர்மாணித்து வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஆகையால் இந்த ஸ்தலத்துக்கு பிரம்மபுரி என்றும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார்.

இந்த திருத்தலத்துக்கு "பல்லவபுரமான வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்றும் பழைய பெயர் உண்டு. இந்த பல்லவபுரம்தான் மருவி அருகில் உள்ள பல்லாவரம் பகுதி ஆனது. இதன் அடிப்படையில் முற்காலத்தில் பல்லவ மன்னர் ஒருவர், இங்கு முதலில் கோயில் கட்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனை, இப்பகுதியில் கடந்த 1901 ஆம் ஆண்டு, தொல்பொருள் துறையினர் நடத்திய ஆய்வில் கிடைத்த 14 கல்வெட்டுகளில் மிகப் பழைமையான முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 - 1120) காலத்திய கல்வெட்டு உறுதி செய்கிறது.

இக்கோயிலுக்கு திருப்பணி செய்து 41 வேலி நிலங்களை தேவதானமாக வழங்கிய பிற்காலச் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன், இந்த ஊரின் பழைய பெயராகிய "வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்பதனை, தனது பெயரில் "திருநீற்றுச் சோழநல்லூர்' என்று மாற்றி ஆணையிட்டதாக இந்த கல்வெட்டு கூறுகிறது. பல சோழமன்னர்கள் இவ்வாலயத்துக்கு திருப்பணிகள் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இவ்வூர் "ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டத்து குலோத்துங்க சோழ வளநாட்டு சாத்தூர் நாட்டு திருச்சுரம்' என்றும் இருந்ததையும் அறியமுடிகிறது.

சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். இந்த மலையில் வீற்றிருப்பதால் இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி, பின்னர் திரிசூலமாகி விட்டதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் திருசூலநாதராகிய இறைவன் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். கருவறையின் அமைப்பு கஜபிருஷ்ட (தூங்கானைமாடம்) அமைப்புடையது.

அம்பிகையின் திருநாமம் திரிபுரசுந்தரி, அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி எழில்கோலத்துடன் அருள்புரிகிறாள். அன்னையின் திருக்கரங்களில் அட்சத மாலையும் தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள்பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி.

திரிசூலநாதரின் கருவறையில் இறைவனுக்கு அருகிலேயே சௌந்தராம்பிகை என்ற திருப்பெயருடன் அம்மன் சிலாரூபமாய் காட்சி தருகிறாள்.

இக்கோயில் கட்டட, சிற்பக் கலைக்குப் பெயர் பெற்றதாக விளங்குகிறது. கருவறைச் சுற்று மாடத்தின் மேல் பகுதிச் சுற்றில் பூதகண வரிசையும் அவற்றின் நடுவே சிவலிங்கத்தை பிரம்மன் வழிபடுதல், கண்ணப்ப நாயனார் பக்தி, சிவலிங்கத்தை அனுமார் வழிபடுதல், லிங்கத்தின் மேல் பால் சொரியும் பசுவின் சிற்பங்கள் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. கருவறையை சுற்றியுள்ள தேவகோட்டங்களுக்கு மேலே மகரதோரண சிற்பங்களிலும் வாலி -சுக்ரீவன் யுத்தம் போன்ற புராணக் கதைகளும் சோமாஸ்கந்தர், ரிஷபாரூட மூர்த்தி போன்ற இறை வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத் தூண்களிலும் காலசம்ஹார மூர்த்தி, இருமுகம் கொண்ட சரப மூர்த்தி, காமாட்சி அம்மன் தவம், காளிங்க நர்த்தனம் உள்ளிட்ட அற்புத சிற்பங்களைக் காணலாம்.

கோட்டத்தில் வீற்றிருக்கும் தெய்வ வடிவங்களில் கணபதி இங்கே குண்டலினி சக்தியை மேலெழுப்பும் நாக யக்ஞோபவீத கணபதியாகக் காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்தி வலது காலை முயலகன் மீது ஊன்றி, தனது இடது காலை குத்திட்டு வைத்திருக்கிறார். மேலும் வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருவதால் தட்சிணாமூர்த்தி, இங்கே அர்த்தநாரீஸ்வர கோலத்தில் வீற்றிருப்பதாக அர்த்தம் கொடுக்கிறது.

கருவறைச் சுற்றுப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியரிடமும் தனிச் சிறப்புகள் உள்ளன. வழக்கமாக முருகனின் வாகனமான மயில் வலப்புறம் நோக்கி இருக்கும். ஆனால் இங்கு இடப்புறத்தை நோக்கியுள்ளது. அதோடு ஒரு காலை சற்றே தூக்கி பறக்கத் தயாராகும் நிலையிலும் காணப்படுகிறது. இங்கு பிரகாரத்தில் மார்க்கண்டேயர் லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். கோயிலுக்கு வெளிச்சுற்றில் ஆதிசங்கரர் சந்நிதியும் அமையப்பெற்றுள்ளது.

ஆலயத்தின் தல விருட்சம் மரவல்லி. தீர்த்தம் பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம். காலை, மாலை இருவேளைகளிலும் இறைவனுக்கு ஆராதனை நடத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோயிலுக்கு கடந்த 1960 ஆம் ஆண்டு கவியோகி சுத்தானந்த பாரதியார் உள்ளிட்ட பெரியோர் அடங்கிய குழுவினரால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆலயம் செல்லும் வழி: திரிசூலம் ரயில் நிலையம்/ திரிசூலம் விமான நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறம் 1 கி.மீ. மலை மீது சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம். ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

தொடர்புக்கு: 94447 64162.

- பத்மன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com