

திருநாவுக்கரசரைத் துன்புறுத்த எண்ணியவர்கள் அவரை நீற்றறையில் இட்டார்கள். நீற்றறை என்பது சுண்ணாம்புக் காளவாய். குறிப்பிட்ட கற்களைப் பதப்படுத்தி மென்மையாக்கிச் சுண்ணமாக்குவதற்காக உயர் வெப்பத்தில் இருக்கும் அறை. கல்லே மென்மைப்படும் எனில் உடல் என்னவாகும்?
காற்று புகவோ வெளிச்சம் புகவோ வழியில்லாமல் உயர் வெப்ப நீராவி எங்கும் பரவிக் கிடக்கும் நீற்றறைக்குள் நாவுக்கரசரைத் தூக்கிப் போட்டனர்.
நீற்றறைக்குள் நாவுக்கரசர் வெப்பம் கண்டிலார். சிவனையும் திருநீற்றையும் சிந்தித்த அவருக்கு சுண்ணாம்பு நீற்றறை, திருநீற்றறைபோல் தெரிந்தது.
சூடோ வெப்பமோ ஏதுமில்லாமல் குளிர்ச்சி மட்டும் கண்டார். சுண்ணாம்புத் தண்ணீர் கொதிக்கும் ஒலி, வீணையொலியாய்க் கேட்டது; வெப்பக் காற்று, தென்றல் போல் குளிர்ந்தது; நீராவி சுழலும் மெல்லிய ஒலி, வண்டுகளின் ரீங்காரம் ஆயிற்று.
திருநாவுக்கரசர் பதிகம் பாடிக் கொண்டிருந்தார்.
சில நாள்கள் கழித்து அறையைத் திறந்தார்கள் தீங்கு நினைத்த பாவியர். திறந்து பார்த்தால்.... மேனியில் சிறு காயமோ கொப்புளமோ கூட இல்லாமல் பிரகாசமுடன் விளங்கினார் பெருமான்.
நீற்றறையில் நீடு வெப்பம் தணிய
நாவுக்கரசர் பாடிய பதிகம்
"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே''.
நீற்றறையில் ஏழு நாள்கள் அடைக்கப்பட்டிருந்தார் நாவுக்கரசர். இந்நிகழ்ச்சியும் திருவதிகைத் தலத்திலேயே நிகழ்ந்தது. நீற்றறை இப்போது நீரோடையாக விளங்குகிறது. சக்கர தீர்த்தம் என இப்போது வழங்கப் பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.