திருநாங்கூர் 11 கருட சேவை!

108 வைணவ தலங்களில் நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 11 கோயில்களில் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. கோயில்களில் ஆண்டுதோறும் கருடசேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
Updated on
2 min read

108 வைணவ தலங்களில் நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 11 கோயில்களில் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. கோயில்களில் ஆண்டுதோறும் கருடசேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும்.

தை அமாவாசைக்கு மறுநாள் (9.2.2016- இரவு 11 மணி அளிவில்) கருடசேவையின்போது, 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் திருநாங்கூர் மணி மாடக்கோயிலில் எழுந்தருள, திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், குமுதவல்லி நாச்சியாருடன் மணவாளமாமுனிகள் சகிதம் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, மாலை மரியாதையுடன் வலம் வந்து மங்களாசாசனம் செய்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அனைத்து பெருமாள்களுக்கும் ஒரேநேரத்தில் தீபாராதனை காட்டப்படும்!

ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட, அது நீங்க, சிவபெருமான் உமையுடன் கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலைக் குறித்து தவம் இயற்றினார்.

அவர்முன் தோன்றிய திருமால், அவரை பலாச வனத்தில் உள்ள

நாங்கூர் திருத்தலம் சென்று, பதினொரு ருத்ர தோற்றங்கள் கொண்டு அசுவமேத யாகத்தைச் செய்யுமாறும் } அது நிறைவுறும் சமயத்தில், தான் வந்து அவரது தோஷத்தை நீக்குவதாகவும் வாக்களித்தார். அதன்படி, சிவபெருமானும் 11 ருத்ர ரூபங்கள் கொண்டு யாகத்தை இயற்றினார். அவருக்கு ஸ்ரீமன் நாராயணன், பிரணவ விமானத்தில் காட்சியளித்து சிவனுடைய தோஷத்தைப் போக்கினார் என்கிறது தலப்புராணம். தான் கொண்ட பதினொரு ருத்ர உருவங்களுக்கு தனித்தனியே அதாவது பதினொரு வடிவில் அருள்புரிந்ததால் திருமால், இந்த திவ்யதேசத்தில் பதினொரு அர்ச்சா மூர்த்தங்களாக விளங்க வேண்டும் என்று சிவபெருமான் கேட்டுக்கொண்டார்.

பின்னாளில் பக்தர்கள் 11 ருத்ரர்களுக்குக் காட்சி தந்த 11 நாராயணன்களை தரிசித்து அனைத்துப் பேறுகளையும் பெற வேண்டும் என்பது சிவபெருமானின் விருப்பம். அதன்படி, பெருமாள் கொண்ட கோலங்கள்தான் இப்போது பதினொரு திவ்யதேசங்களாக திருநாங்கூரில் அமைந்துள்ளன. அவற்றில் பிரதானமானது திருமணிமாடக்கோயில் ஆகும்.

இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும்பக்தர்களுக்கு இங்கு சேவை சாதிக்கும் பெருமாள்களை தரிசித்தால் புண்ணிய பலன் பல கிடைப்பதுடன் மேலும் அதற்கொப்பான இன்னொரு திவ்ய தேசப்பெருமாள்களையும் தரிசிக்கும் பேறும் கிடைத்துவிடுகிறது.

ஸ்ரீமத்குடந்தை ஆண்டவன் சுவாமிகள் திருவாக்குப்படி, "மணிமாடக்கோயில்', எம்பெருமானை வழிபடுவதால் இமயமலை, பத்ரிநாத்திலுள்ள திருபத்திரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும்.

"வைகுந்த விண்ணகரப் பெருமாளை', வணங்கியோர் அந்த ஸ்ரீ வைகுந்தத்து நாயகனையே வணங்கிய அருள்பெறுவர். "அரிமேய விண்ணகரப் பெருமாள்', தன்னை சேவிப்பவர்களுக்கு வடமதுரைப் பெருமாளை சேவித்த பாக்கியத்தை அருள்கிறார்.

"திருத்தேவனார் தொகை பெருமாள்', தன்னுடன் கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தைப் பெருமாளையும் சேர்த்து தரிசிக்கும் அருளை நல்குகிறார். "திருவண் புருஷோத்தம நாயகனை', வழிபட்டோர் ராமன் அவதரித்த அயோத்தி திருத்தலத்தை வழிபட்ட பேறு அடைவர்.

"செம்பொன்சேய் கோயில் பெருமாள்', காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார். "திருதெற்றியம்பலம் அருளாளன்', ஸ்ரீ ரங்கத்து அரங்கனை தரிசித்த சிறப்புகளை அருள்கிறார். "திருவெள்ளக்குளம் திருமால்', திருப்பதி திருவேங்கடவனை வழிபடும் பாக்கியத்தை நல்குகிறார்.  "திருமணிக்கூட நாயகன்', தானும் காஞ்சி வரதனை வணங்கிய நற்பலன்களை வழங்கிறார்.

"திருக்காவளம்பாடிப் பெருமாள்', காஞ்சியிலுள்ள பாடகப்பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார். "திருப்பார்த்தன்பள்ளி எம்பெருமான்' சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வணங்கிய பெரும் பேறளிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com