பொன்மொழிகள்!

வாழ்க்கையின் லட்சியம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் விதிகளையும் கட்டளைகளையும் ஒரு மனிதன் பின்பற்ற வேண்டும் என்பதுதான். இதுவே பக்தியைப் பெறுவதற்கு உரிய உபாயம் ஆகும்.
பொன்மொழிகள்!
Updated on
1 min read

வாழ்க்கையின் லட்சியம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் விதிகளையும் கட்டளைகளையும் ஒரு மனிதன் பின்பற்ற வேண்டும் என்பதுதான். இதுவே பக்தியைப் பெறுவதற்கு உரிய உபாயம் ஆகும்.


அடுத்தது கிருஷ்ணனிடம் தனது செயல்களின் பயன்களை ஒப்புவித்தல், அதாவது சரணடைதல். அதற்கடுத்தது ஒருவன் தன்னை கிருஷ்ணனிடம் ஒப்படைத்ததால் விளையும் பக்தியே.


பின்னர் ஞானம் கலந்த பக்தியும், யுக்தியே இல்லாத சுத்த பக்தியும், அதைத் தொடர்ந்து அன்பு கலந்த பக்தியும் மிகச் சிறந்தது.


கிருஷ்ணனைத் தோழனாக அன்பு செய்தல். கிருஷ்ணனைக் குழந்தையாக நேசித்தல். கிருஷ்ணனைக் காதல் மணவாளனாகக் கொள்ளல். 


இறுதியாக,"பிரேம விலாச விவர்த்தம்' என்னும் உயர்ந்த நிலை. இது ஐக்கியத்தை, அனுபூதியைப் பற்றிய உண்மை. இதில் பகவானுக்கும் அவனிடம் பக்தி செலுத்துபவர்களுக்கும் வேறுபாடில்லை.


இதிலேதான் "தத்துவமஸி' "அது நீயாக இருக்கிறாய்' என்னும் உண்மை தெளிவாகிறது.


சுவையறிவற்ற காக்கை வேப்பங் கனியைக் கொத்தும். சுவையறிவுடைய குயிலோ மாம்பூக்களை உண்ணும். அதைப் போல துர்ப்பாக்கியசாலியான ஞானி வறட்டு ஞானத்தைச் சுவைப்பான். பாக்கியசாலியான ஞானி கிருஷ்ணப் பிரேமாமிருதத்தைப் பருகுவான்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

மிதிலை மன்னர் நிமி விருந்துச் சாப்பாட்டை முடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பருந்து சிறிய இறைச்சித் துண்டு ஒன்றைக் கொத்தியபடி பறந்து வந்தது. அதன் பின்னால் நூற்றக்கணக்கான காக்கை குருவிகள் கரைந்து கதறிக்கொண்டு படையெடுத்து வந்தன. ஒவ்வொன்றும் அலகால் பருந்தைத் தாக்கி, மாமிசத் துண்டத்தைப் பறிக்க முயன்றன. இவ்வளவுக்கும் சமாளித்து அந்த அற்ப உணவை விடாமல் வட்டமிட்டுக் கொண்டிருந்தது பருந்து.

கடைசியில் அந்தப் பருந்துக்கே சலிப்பு வந்து இறைச்சித் துண்டைக் கீழே போட்டுவிட்டது. வேறொரு பறவை இறைச்சித் துண்டை கொத்திக் கொண்டு பறக்க ஆரம்பித்தது. உடனே அதை மற்ற எல்லாப் பறவைகளும் துரத்தித் தாக்கின. முதல் பருந்து நிம்மதியாக தன் இருப்பிடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

இறைச்சியைக் கொத்திய இரண்டாவது பருந்தும் பிறகு இறைச்சித் துண்டை கீழே போட்டுவிடவே, அதை வேறொரு பறவை கொத்திக்கொண்டு விரைந்தது. பறக்கும் பட்டாளமும் முந்திய பறவையை விட்டுவிட்டு, புதிய எதிரியைத் துரத்தின. இப்படியே இறைச்சித் துண்டும், அதற்கான தாக்குதலும் இடம் மாறிக்கொண்டே போயின. அரசர் நிமியின் பகுத்தறிவு அப்போது ஓர் 
உண்மையை உணர்த்தியது: 

"காமம், போகம், பொருள், சுயநலம் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கும் இந்தப் பறவைகளின் கதிதான் ஏற்படுகிறது. எவர் அவற்றைத் துறந்து விடுகிறாரோ, அவருக்கு நிம்மதியும் சுகமும் கிடைக்கின்றன. அப்படித் துறக்காதவர், துன்பத் தாக்குதல்களுக்கு இரையாகிறார்கள்.'அன்று முதல் அரசர் நிமி போக ஆசைகளைத் துறந்து தியாக வாழ்க்கையை மேற்கொண்டார்.

- புராணக் கதை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com