இயேசு வாழ்ந்த காலத்தில் மக்கள் செய்த முக்கியமான பணிகள் நான்கு. ஒன்று விவசாயம். இயேசு தனது உவமைகளில் பலவற்றை விவசாயத்தோடு தொடர்பு படுத்திப் பேசினார். பயிராக வளராமல் களையாக இருந்தால் தூதர்கள் கைகளால் அறுபட்டு, தீச்சூளையில் எறியப்படுவோம் என எச்சரித்தார்.
இரண்டாவது தொழில், கால்நடை மேய்த்தல். அதை வைத்தும் அவர் பல உவமைகள் சொன்னார். செம்மறிகளையும், வெள்ளாடுகளையும் பிரிப்பேன். செம்மறியாடுகள் பரலோக ராஜ்யம் செல்ல, வெள்ளாடுகள் எரிநரகத்தில் எறியப்படும் என்றார்.
மூன்றாவது தொழில், வணிகம். நல்ல வணிகன் ஒரு நல்ல முத்தைக் கண்டடைவான். வணிகனின் கையில் நாம் ஒரு நல்ல முத்தாக இருக்க வேண்டும். அப்போது தான் பரலோக ராஜ்யம் சாத்தியமாகும். விலைமதிப்பற்ற, போலித்தனமான முத்துகள் புறங்கையால் ஒதுக்கப்படும் என்றார்.
நான்காவது மீன்பிடி தொழில். இந்த உவமையில் ""பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.'' (மத்தேயு 13 : 47 - 50)
கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வலை வீசும்போது, அதில் எல்லா வகையான மீன்களும் பிடிபடுகின்றன. இந்த மீன்களில் நல்ல மீன் எது கெட்ட மீன் எது என்பது பற்றி மீனவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பர். நல்ல மீன்களை பயன்படுத்துவதற்காக கூடையிலும் கெட்ட மீன்களை குப்பைக் கூடையிலும் வீசுவர். நமது பார்வைக்கு நல்ல மீனைப் போன்று தெரியும் ஆனால் அதை பயன்படுத்த முடியாத மீன்கள் போடும் இடத்தில் போடுவர்.
இயேசு சொல்லும் இந்த உவமையில் இரண்டு வித மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார். தேவ வசனத்தைக் கேட்டு, அதன்படி நடக்காதவர்கள் மற்றும் வழிவிலகிப் போகும் மக்கள் கெட்ட மீன்கள் எனலாம். இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி தேவனுக்கு பயந்து நல் வழியில் நடப்பவர்கள் நல்ல மீன்கள் எனலாம்.
எனவே, வேத வசனத்தைக் கேட்கின்ற நாம் மனம் திரும்பி இறைவனின் வழியில் வரவேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பு. உலகத்தின் முடிவு நிச்சயம் உண்டு. ஒவ்வொருவருடைய மரணமும், அவருடைய உலகத்தின் முடிவு. இறுதித் தீர்ப்பு இறைவன் முடிவு செய்யும் நாளில் நடக்கும். இப்போது வலை வீசப்பட்டுள்ளது. இந்த வலைக்குள் நுழைந்து தேவனின் எல்லைக்குள் பிரியத்துடன் வாழ்பவர்கள் பாக்கியவான்கள். இறைவனுக்கு ஏற்புடைய நல்ல மீன்களாக வாழும் ஒவ்வொருவரும் இறைவனின் கூடையில் நுழைவது நிச்சயம். தேவனுடைய வார்த்தையைக் கேட்டபின்பும் கெட்ட மீன்களாக வாழ்பவர்கள் முடிவில்லா நெருப்பில் விழப் போவதும் சர்வ நிச்சயம். எனவே நல்லவர்களாக வாழ்வோம் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்போம்.
- ஒய்.டேவிட் ராஜா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.