புண்ணிய பூமியில் புனிதப் பயணம்! 3
By DIN | Published On : 12th April 2019 10:51 AM | Last Updated : 12th April 2019 10:51 AM | அ+அ அ- |

பண்டைய எகிப்தில் நைல் நதி கரையில் வாழ்ந்த மக்கள் கிமு 3500-ஆம் ஆண்டு காலகட்டத்தில் பப்பிரஸ் தாவரத்தில் இருந்து செய்யப்பட்ட காகிதம் போன்ற பொருளை பயன்படுத்தியுள்ளனர். அந்த சுருள்களில் தான் விவிலியம் எழுதப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அதில் இருக்கும் எழுத்துகள் அழியாது என்பதால் எகிப்து மக்கள் பப்பிரûஸ பயன்படுத்தி எழுதி வந்துள்ளனர்.
விவிலியத்தின்படி இன்றைய எகிப்தில் தான் மிதியான் நாடு இருந்தது. நைல் நதி ஓரத்தில் உள்ள கோசேன் என்ற இடத்தில் தான் யோசேப்பு காலத்தில் எகிப்தை ஆண்ட பார்வோன் மன்னரின் அரண்மனை இருந்தது. கானான் தேசத்தில் (இன்றைய இஸ்ரேல் நாடு இருக்கும் பகுதி) தனது தந்தை யாக்கோபு மற்றும் 11 சகோதர்களுடன் யோசேப்பு வாழ்ந்து வந்தார். அப்போது யோசேப்பின் 11 சகோதர்களும் சேர்ந்து மீதியானியர்கள் மூலம் யோசேப்பை அடிமையாக விற்றுவிட்டார்கள். மீதியானியர்கள் யோசேப்பை எகிப்து மன்னரான பார்வோனின் தளபதி போத்திபார் என்பவரிடம் விற்றுவிட்டார்கள் (ஆதியாகமம் 37- ஆம் அதிகாரம்). அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த யோசேப்பு, பார்வோன் மன்னரின் சொப்பனத்துக்கு மிகச்சரியாக விளக்கம் அளித்ததால் யோசேப்பை மன்னர் விடுவித்தார். அதோடு, தனக்கு அடுத்த பதவியை (ஆளுநர்) கொடுத்தார் (ஆதியாகமம் 41-ஆம் அதிகாரம்).
யோசேப்பு பதவியில் இருந்த காலத்தில் அவருடைய சகோதரர்கள் வாழ்ந்த கானான் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால் எகிப்து தேசத்துக்கு வந்து யோசேப்பு உதவியுடன் நைல் நதி கரையில் குடியேறினர். எபிரேயர்கள் பலுகி பெருகியதால் நாடு முழுவதும் பரவினர். யோசேப்பு மறைவுக்கு பின்னர் 400 ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தில் அடிமைகளாக எபிரேயர்கள் நடத்தப்பட்டனர். இந்த இடங்கள் அனைத்தும் இன்றைய எகிப்தில் நைல் நதி கரையில் 94 சதவீத வளமான நிலங்கள் இருக்கும் பகுதியில் தான் நடைபெற்றுள்ளன.
எகிப்தில் அடிமைகளாக இருந்த எபிரேயர்களை மீட்க கடவுள் 10 வகையான வாதைகளை எகிப்தியர்களின் வீடுகளுக்கு அனுப்பியுள்ளார் (யாத்திராகமம் 7, 8-ஆம் அதிகாரங்கள்). அவ்வாறு மீட்கப்பட்ட எபிரேயர்கள் மோசே என்பவரின் தலைமையில் தான் இஸ்ரúல் நோக்கி விடுதலை பயணம் மேற்கொண்டனர்.
இஸ்ரேல் மக்களை மோசே அழைத்துச் செல்லும்போது செங்கடலை கோலால் பிளந்து நடந்து சென்ற பகுதி, கசப்பான தண்ணீர் நன்னீராக மாறிய பகுதி (மாரா), சீனாய் மலையில் கடவுளிடம் இருந்து 10 கட்டளைகளை மோசே பெற்று எபிரேயர்களுக்கு கொடுத்த இடம், விடுதலை பயணத்தின்போது மோசேவுக்கு கீழ்ப்படியாத எபிரேயர்கள் கடவுளை மறந்துவிட்டு மோசேயின் சகோதரர் ஆரோன் தலைமையில் பொன் கன்றுக்குட்டிகளை வணங்கிய பகுதி, மோசேவுக்கு எரியும் முள்புதரில் கடவுள் காட்சி அளித்த இடம், விடுதலை பயணத்தில் எபிரேயர்கள் கடந்து சென்ற சீனாய் பாலைவனப்பகுதி உள்ளிட்ட விவிலியத்தில் பழைய ஏற்பாடு (இயேசு கிறிஸ்துவுக்கு முன் எழுதப்பட்ட விவிலிய பகுதிகள்) சார்ந்த இடங்கள் அதிகமாக உள்ளன.
அன்றைய இஸ்ரúலும், இன்றைய பாலஸ்தீன நாட்டில் உள்ள பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறந்தவுடன், ஏரோது மன்னர் கொலை செய்துவிடுவார் என பயந்து இயேசுவின் தந்தை யோசேப்பு, தாய் மரியாள் மற்றும் பாலகன் இயேசு ஆகியோர் இறை தூதரால் வழிநடத்தப்பட்டு எகிப்து தேசத்தின் நைல் நதி கரையில் தான் அடைக்கலம் புகுந்தனர்.
இதைபோல எகிப்தில் பழைய, புதிய ஏற்பாட்டு பகுதிகளில் (விவிலியம்) இடம்பெற்றுள்ள ஏராளமான இடங்களை இன்றைய எகிப்தில் கண்டு ரசிக்கலாம். இயேசுவின் சீடர்களில் ஒருவரான மாற்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட தேவாலயம் கெய்ரோவில் காட்சி அளிக்கிறது. அன்று இஸ்மவேலர்கள் (இஸ்லாமியர்கள்), எபிரேயர்கள் வசித்து வந்த எகிப்தில் இப்போது 90 சதவீதம் இஸ்லாமியர்களும், சுமார் 5 சதவீத கிறிஸ்தவர்களும் வசித்து வருகின்றனர். இஸ்லாமிய நாடான இங்கு இப்போது யூதர்கள் இல்லை.
- ஜெபலின் ஜான்
(தொடரும்....)
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G