பொன்மொழிகள்!

கண்பார்வையால் சோதித்து தூய இடத்தில் காலை வைக்க வேண்டும்; துணியால் வடிகட்டித் தூய்மையாக்கிய நீரைக் குடிக்க வேண்டும்; சத்தியத்தால் தூய்மையாக்கப்பட்ட சொற்களை மட்டுமே பேச வேண்டும்.
பொன்மொழிகள்!
Updated on
1 min read

கண்பார்வையால் சோதித்து தூய இடத்தில் காலை வைக்க வேண்டும்; துணியால் வடிகட்டித் தூய்மையாக்கிய நீரைக் குடிக்க வேண்டும்; சத்தியத்தால் தூய்மையாக்கப்பட்ட சொற்களை மட்டுமே பேச வேண்டும். மனதில் திருப்தி ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

- சுபாஷிதம் (ஒரு சம்ஸ்கிருத சுலோகம்)

யாகம், யக்ஞம் எல்லாம் கேட்பதற்கு உயர்வாகத் தோன்றுகின்றன. ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம். அதில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் கடின உழைப்பெல்லாம் வீணாகிவிடும். எந்த வகையான சாதனைகளிலும் இடையூறுகள் இல்லாமல் இல்லை. ஆனால், கங்கை கரையிலுள்ள காசியில் இறக்கும் தறுவாயில் இருக்கும் மக்களுக்கு சிவபெருமான் என்ன உபதேசம் செய்கிறார்? அவர், ""ஓம் ராம் ராமாய நம:'' என்ற ராமநாமத்தைத்தான் அப்போது உபதேசம் செய்கிறார். ஆகவே மனிதர்கள் ராமநாமத்தில் இப்போது முதலே பக்தியைச் செலுத்தி நலம் பெற வேண்டும்.

- துளசிதாசர் (விநய பத்ரிகா)

மனஅமைதியின்றி இன்பம் இல்லை. செல்வம், கல்வி, மனைவி, மக்கள் எல்லாம் இருந்தாலும், ஜப தபங்கள் செய்தாலும், மனஅமைதி ஒன்று இல்லாவிட்டால் இன்பம் என்பது இல்லை.

- மகான் தியாகராஜர்

பெரிதும் பக்திக்கு உரியவை பகவானின் நாமங்கள் ஆகும். அவற்றை ஆழ்ந்த பக்தியுடன் தீவிரமாகத் திரும்பத் திரும்பச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சில சமயங்களில் தாங்களாகவே உரக்கச் சிரிப்பார்கள்; பாடுவார்கள்; சில வேளைகளில் நடனமாடுவார்கள்; அவர்கள் மானம், அபிமானம் ஆகியவற்றைப் பார்க்காத நிலையை அடைந்துவிடுகிறார்கள்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

ஆதிகுரு தட்சிணாமூர்த்தி மெளனத்தாலேயே சனகாதி ரிஷிகளின் சந்தேகங்களைக் களைந்தருளினார். அவரே மனிதகுலத்திற்கு வாழையடி வாழையாக குரு பரம்பரை மூலமாக அனுக்கிரகம் செய்துகொண்டிருக்கிறார். ஞானகுருவை ஏதோவொரு சாதாரண மனிதனாகக் காண்பது அக்ஞானமாகும்.

- ஸ்ரீ ரமண மகரிஷி

எவன் ஒருவன், "உடல் காரணமாகவே எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன; தூய்மையே வடிவமான ஆத்மாவாகிய என்னால் செயல் எதுவும் செய்யப்படவில்லை' என்ற தீர்மானத்தில் இருக்கிறானோ, அவன் செயல்களைச் செய்தாலும் செய்யாதவனே ஆவான்.

- அஷ்டாவக்ர கீதை

துறவு நிலையில் ஏற்படும் இன்பமாகிய அமுதத்தை உத்தம சந்நியாசிகள் பருகுகிறார்கள். எல்லாவற்றையும் தியாகம் செய்யும் உத்தம சந்நியாசிகள் இறவாத நிலையை எய்துகிறார்கள்.

நிர்விகல்பத்தை எட்டிய அவர்கள் இயல்பில் முக்தர்களாகவும், உலகப்பற்று என்னும் பிணி அற்றவர்களாகவும் ஆகிறார்கள்.

-அவதூத கீதை

முதலில் கடவுளைத் தேடு. பிறகு உலகப் பொருள்களைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆன்மிகத்தைப் பெற்ற ஒருவன் உலக வாழ்க்கையில் ஒருபோதும் மனஅமைதியை இழக்கமாட்டான்.

- பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com