இரு பயன் தரும் அருங்கடமை

இஸ்லாத்தின் இரண்டாம் கடமையான தொழுகைக்கு அடுத்து அடியானை அல்லாஹ்வின் பக்கம் நெருங்க வைப்பது நோன்பு. அதனால்தான் நோன்பு மூன்றாம் கடமையாகிறது.
Updated on
2 min read

இஸ்லாத்தின் இரண்டாம் கடமையான தொழுகைக்கு அடுத்து அடியானை அல்லாஹ்வின் பக்கம் நெருங்க வைப்பது நோன்பு. அதனால்தான் நோன்பு மூன்றாம் கடமையாகிறது. இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் மக்களுக்கு நேர்வழி காட்டும் குர்ஆன் இறக்கப்பட்டது. அம்மாதத்தை அடைவோர் அம்மாதத்தில் நோன்பு நோற்கின்றனர். 2020 -ஆம் ஆண்டில் ரமலான் நோன்பு ஏப்ரல் 25- இல் துவங்குகிறது.
முதல் மனிதர் முதல் இறைதூதர் ஆதம் நபி துவங்கி இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுவத்தைப் பின்பற்றுவோர் வரை அத்தனை ஏக இறைகொள்கையை கடைபிடிப்போருக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டதை இறைமறை குர்ஆனின் 2-183 -ஆவது வசனம் உங்களுக்கு முன் இருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள் மீதும் நோன்பு கடமை ஆக்கப்பட்டுள்ளது. நீங்கள் தூய்மை உடையோர் ஆகலாம் என்று கூறுகிறது. முதல் தூதரிலிருந்து தூதுவத்தைப் பின்பற்றியோர் உலக மோகத்தில் ஏக இறை கொள்கையிலிருந்து பிறழும் பொழுது தவறிழைக்கும் பொழுது தக்கபடி திருந்த பொருத்தமான இறைதூதர்களை உருவாக்கி உண்மையை உலகோருக்கு உணர்த்தினான் அல்லாஹ். அப்படி அடுத்து அடுத்து வந்த தூதர்கள் போதித்த நோன்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அம்மாற்றங்கள் ஏற்றம் நோக்கியவை. தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் நோன்பு இறுதிதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்து நோற்ற நோன்பு.
இவ்வசனத்தில் வரும் உங்களுக்கு முன் இருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது என்ற சொற்றொடர் மனிதன் தோன்றியது முதல் மனிதனுக்கு நோன்பு கடமையாக இருந்ததை வலியுறுத்துகிறது. அதைப்போல தூய்மை உடையோர் ஆகலாம் என்ற சொற்றொடர் அதிகாலை கிழக்கு வெளுத்தது முதல் சூரியன் மறையும் வரை உண்ணல், குடித்தல், போகித்தல் முதலியவற்றை முற்றிலும் தவிர்த்து கொள்வதால் அல்லாஹ்வின் மீது அச்சமும் பக்தியும் ஏற்படுகின்றன. உணவையும் இச்சைகளையும் பகல் பொழுதில் துறப்பதன் மூலம் மனத்தை மாசுபடுத்தும்  ஆணவம், அகந்தை, தவறான எண்ணங்கள் எல்லாம் ஒழிந்து மனம் தூய்மை அடைவதை அறிவிக்கிறது. தூய்மையான இதயத்தில் இறை அச்சத்தோடு தெளிவும் ஏற்படும்.
ஆதமின் மக்களின் செயல்கள் அவனுக்கு உரியது. ஆனால் நோன்பின் கூலியை நோன்பு நோற்றவருக்குப் போற்றப்படும் இறைவனே ஏற்றமுடன் நேரடியாக கொடுக்கிறான். நோன்பு நோற்றவர் மறுமையில் சொர்க்கத்தில் ரைஹான் என்னும் சிறப்புமிக்க சீரான வாசல் வழியில் நேராய் செல்வர்.
ஒருவேளை உணவை ஒழியென்றால் ஒத்துழைக்க மறுக்கும் இருவேளை உணவை ஏனென்றால் ஏற்க மறுக்கும் வயிறு வைகறை புலருமுன் உண்ண வேண்டியதை உண்டு பருக வேண்டியதைப் பருகி அந்திசாய்ந்து இரவு துவங்கும் மஃரிப் வரை உண்ணாது, பருகாது, பசிக்காது, தாகிக்காது, வசியப்பட்ட இறைகட்டளைக்குக் கட்டுப்பாடு இஸ்லாத்தின் மூன்றாம் கடமை நோன்பு நோர்க்கப்படுகிறது. இந்த நோன்பின் மூலம் வெள்ளத் தனையது மலர் நீட்டம் போல உள்ளம் தூய்மை பெற்று வாய்மை பேணி நேயமுடன் வாழும் வாழ்வை வலுப்படுத்து
கிறது.
தற்காலத்தில் காலை உணவைத் தவிர்க்காதீர்கள், காலை உணவு கட்டாயம் உண்ணப்பட வேண்டும் என்று மருத்துவம் கூறுகிறது. அக்காலத்திலேயே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகலில் நோன்பு நோற்போர் ஸஹரில் (வைகறையில்) உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ""ஸஹரில் தாராளமாக உண்ணுங்கள். அருந்துங்கள். படர்ந்து வரும் வெளிச்சம் உங்களைத் தடை செய்ய வேண்டாம். ஆனால் செம்மை தட்டுப்
படும் வரை'' என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அறிவிக்கிறார் தல்குப்னு அலி (ரலி) நூல்- அபூதாவூத், திர்மிதி, அவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது.
அக, ஆகம பயன்களோடு புறபயன்களும் மிகுந்துள்ள நோன்பை இறைவன் கட்டளைப்படி நோற்று இரு பயன்களையும் பெறுவதோடு இறை திருப்தியையும் நிறைவாய் அடைவோம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com