தட்சனை தண்டித்த தலம்!
தட்சன் சிவனிடம் வரம் பெற்ற கர்வத்தால் சிவனையே மதிக்காமல் யாகம் செய்கிறான். இதனால் கோபமடைந்த சிவன் அவனிடமிருந்து வரத்தைப் பறித்து விடுகிறார். இதனாலேயே இத்தலம் "திருப்பறியலூர்' ஆனது.
இறைவன் வீரட்டேஸ்வரர், இறைவி இளங்கொம்பனையாள். தாட்சாயணியின் தந்தை தட்சன். அவன் யாகம் நடத்தும் போது தரப்பட வேண்டிய அவிர்பாகம் என்னும் முதல் மரியாதையைத் தராமல் ஆணவத்துடன் யாகம் நடத்துகிறான். தன்னை மதிக்காமல் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை எல்லாம் அழித்ததுடன், தட்சனையும் வீரபத்திரர் மூலம் தண்டித்த தலமே திருப்பறியலூர் ஆகும். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சந்நிதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார்.
எனவே நவகிரக சந்நிதி இல்லை. இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. இங்குள்ள தட்சபுரீசுவரரின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கும் காட்சி மிக அற்புதக்காட்சியாகும். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது.
பழைமையான கோயில். மேற்கு நோக்கியது. ஐந்து நிலை ராஜகோபுரம். முன்னால் அலங்கார வாயில் உள்ளது. கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். உள் பிராகாரத்தில் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன.
கோஷ்டமூர்த்தங்களாக துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சுப்பிரமணியர் திருவுருவம் உள்ளது. வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இங்கு இறைவனுக்கு தயிர்சாதம், சுத்தான்னம் நைவேத்யம் செய்கின்றனர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில் இத்தலம் நான்காவது தலம் ஆகும்.
மயிலாடுதுறை - செம்பொன்னார் கோயிலை அடுத்து, பரசலூரில் இத்தலம் அமைந்துள்ளது.