

-நன்மை, தீமை ஆகிய இரண்டையும் நன்கு ஆராய்ந்து சீர்தூக்கி முடிவு செய்பவனே ஞானி.
- புத்தர்
-சுவையறிவற்ற காக்கை, வேப்பங்கனியைக் கொத்தும். சுவையறிவுடைய குயிலோ மாம்பூக்களை உண்ணும். அதைப்போல துர்ப்பாக்கியசாலி வறட்டு ஞானத்தைச் சுவைப்பான். பாக்கியசாலி கிருஷ்ணபக்தி என்ற அமிர்தத்தைப் பருகுவான்.
- கிருஷ்ண சைதன்யர்
-மேகம் இல்லாத ஆகாயத்தில் சூரியன் பிரகாசிக்கிறது. அது போன்று, ஆத்மாவை அனுபவ ஞானம் என்ற சூட்சுமக்கண்களால்தான் அறிய முடியும்.
- திரிபுர ரகஸ்யம்
-கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்களிலும், கலியுகமே மிகவும் உயர்ந்தது! ஏனென்றால், கலியுகத்தில் மட்டும்தான் பகவானே நம்மைத் தேடி வருகிறான். மற்ற மூன்று யுகங்களிலும், நாம்தான் பகவானைத் தேடிச் செல்ல வேண்டியிருந்தது.
-கலியுகத்தில், "பசி' என்று ஒருவர் கையேந்தி நின்றால், உடனே உணவு கொடுத்துவிடுங்கள்! ஏனெனில் அவ்விதம் கேட்டவர் என் ஸ்ரீ ராமனாகவே இருக்கலாம்.
-"பணமில்லை' என்று கேட்டால் உடனே பணம் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவ்விதம் கேட்பது என் பிரபு ஸ்ரீ ராமனாகவே இருக்கலாம்.
-"உடுக்க உடையில்லை' என்று கேட்டால், நீங்கள் அணிந்திருக்கும் உடையே ஆனாலும்கூட, உடனே கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவ்விதம் கேட்பது என் ஐயன் ஸ்ரீ ராமனாகவேகூட இருக்கலாம்.
-கலியுகத்தில், எந்த உருவத்தில், எப்போது பிரபு ஸ்ரீ ராமன் நமக்குத் தரிசனம் தருவான் என்று சொல்ல முடியாது! அவசரப்பட்டு, கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தை இழந்துவிடாதீர்கள்.
- துளசிதாசர்
-துறவிகளையும், ஆச்சார அனுஷ்டானங்களால் உயர்ந்த சான்றோர்களையும், இடைவிடாமல் இறைவனைப் பற்றியே சிந்தித்திருப்பதால் ஆத்மபலம் பெற்ற ஞானிகளையும், தாய் தந்தையரையும், நமக்கு கல்வி கற்றுத் தரும் குருமார்களையும், வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோர்களையும் எங்கு கண்டாலும், எப்போது கண்டாலும், உடனுக்குடன் அவர்களை நமஸ்கரித்து, அவர்களது ஆசிகளைப் பெற வேண்டும். அவர்களின் ஆசிகள் எத்தகைய ஆபத்து நம்மை சூழ்ந்த போதிலும் என்றும் நம்மை காப்பாற்றும்.
- ஸ்ரீமத் பாகவதம்
-விட்டில் பூச்சி தீபத்தின் ஒளியினால் ஈர்க்கப்பட்டு, அதில் வீழ்ந்து மடிகிறது. தூண்டிலில் உள்ள சிறிய புழுவிற்கு ஆசைப்பட்டு மீன், அந்தத் தூண்டிலில் அகப்பட்டு உயிரை இழக்கிறது. வேடன் வைக்கும் பொறியில் உள்ள இரைக்கு ஆசைப்பட்டு, பலம் வாய்ந்த புலியும் கூண்டிற்குள் அகப்பட்டு, அந்த வேடனிடம் சிக்கிக்கொள்கிறது.
அதுபோன்று, விவேகமும் மனஉறுதியும் இல்லாத மனிதர்கள், தங்கள் இந்திரியங்களின் வசப்பட்டு, மது, மங்கை, செல்வம் ஆகிய கொடிய விஷயங்களுக்கு ஆசைப்பட்டு, பல பாவங்களைச் செய்து, தங்களது பிறவியை வீணடித்து மடிகின்றனர்.
- தர்ம சாஸ்திரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.