பொருநை போற்றுதும்! - 99

பொருநையாளின் வடகரையில் இருக்கிறது திருவைகுண்டம்.
பொருநை போற்றுதும்! - 99
Updated on
2 min read

நவகைலாயமும் நவதிருப்பதியும் 

பொருநையாளின் வடகரையில் இருக்கிறது திருவைகுண்டம். 108 திவ்வியதேசங்களில் ஒன்று. தாமிரவருணிக் கரையில் பெருமைபடப் போற்றப்படும் நவதிருப்பதிகளில் ஒன்று. ரோமச முனிவரால் பூஜிக்கப்பெற்ற நவகைலாயங்களில் ஒன்று. 

முக்தியை விரும்பிய (உ)ரோமச முனிவர், தம்முடைய குருவான அகத்தியரிடம் அதற்கான வழியைக் கேட்டார். ஒன்பது தாமரை மலர்களை ஆற்றில் மிதக்கவிட்ட அகத்தியர், அவை கரையொதுங்கும் இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடச் சொன்னார். இவ்வாறு தாமரை மலர்கள் கரையொதுங்கிய இடங்களில், ரோமச முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத் திருமேனிகளில், அருள்மிகு கைலாயநாதர் எழுந்தருளினார். இந்தத் திருத்தலங்களே நவகைலாயங்கள் ஆயின. இந்த வரலாறு நமக்கு ஏற்கெனவே தெரியும். 

இவற்றில், பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர் ஆகிய மூன்று தலங்களும் மேல் கைலாயம் என்றும், சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியவற்றுக்கான தலங்களாகவும் போற்றப்படுகின்றன. குன்னத்தூர் (திருநெல்வேலி திருவேங்கடநாதபுரத்துக் குன்றில் இருக்கும் தலம் - ராகு), முறப்பநாடு (குரு) ஆகிய இரண்டோடு, ஸ்ரீவைகுண்டமும்  நடுக் கைலாயத் தலமாகிறது.  அருள்மிகு சிவகாமியம்மை உடனாய அருள்மிகு கைலாயநாதர் எழுந்தருளியிருக்கும் இது, சனிப் பரிகாரத் தலமும் ஆகும். இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறவும் குடும்ப ஒற்றுமை பெருகவும் கைலாயநாதர் அருள்வார். 

இந்தக் கோயிலில் உள்ள பூதநாதர் விசேஷமானவர். காவல் தெய்வமான இவர், தர்மசாஸ்தாவின் அம்சம். சித்திரைப் பெருவிழாவில், சுவாமிக்கு வாகனமாகும் இவருக்கு வடைமாலை சார்த்தி வழிபடுவது சிறப்பு. யாளிச் சிற்பங்கள் இக்கோயிலுக்கு அழகு. 

இதுவே வைகுண்டம்:

நவகைலாயத் தலமான இவ்வூர், நவதிருப்பதி úக்ஷத்திரமாகவும் திகழ்வது வெகு சிறப்பு. 

திருமாலின் வாசஸ்தலம் ஸ்ரீவைகுண்டம். பூமியிலிருக்கும் இத்தலத்திற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது? 

சத்தியலோகத்திலிருந்த பிரம்மாவிடமிருந்து, சிருஷ்டி ரகசியத்தையெல்லாம் சோமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் திருடிவிட்டான். செய்யவேண்டிய தொழில் பற்றிய தகவல்களை மனதாரக் கற்காமல், வெறுமே ஏட்டளவில் கற்ற பிரம்மா, தடுமாறிப் போனார். திருமாலிடம் வழி வேண்ட, பூமியில் இந்த இடத்தைக் குறிப்பிட்டு, இங்குத் தவம் செய்யச் சொன்னார் திருமால். இவ்வாறே பிரம்மாவும் செய்தார். பிரம்மாவின் தவத்தை மெச்சிய திருமால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து இங்கு எழுந்தருளி, அசுரனை வதைத்து, சிருஷ்டி ரகசியத்தையும் மீட்டுக் கொடுத்தார். 

வைகுண்டத்திலிருந்து எழுந்தருளிய அதே கோலத்தில் எம்பெருமான் இங்கு சேவை சாதிப்பதால், இத்தலத்திற்கு "ஸ்ரீவைகுண்டம்' என்றே பெயர் வந்தது. வைகுண்டத்திலிருந்து வந்து நின்று பிரம்மாவுக்கு அருளிய நிலையில், நின்ற திருக்கோலத்தில், வைகுண்டநாதராகப் பெருமாளும் காட்சி தருகிறார். பெருமாள் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டபோது தானும் உடன் புறப்பட்ட ஆதிசேஷன், பெருமாளுக்குக் குடை பிடிக்கிறார். 

வைகுண்டவல்லி, சோரநாத வல்லி என்று இரண்டு தாயார்கள்.  

உள்ளம் கொள்ளையடித்த கள்ளப்பிரான் அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவருக்குக் கள்ளப்பிரான் என்றும் சோரநாதன் என்றும் திருநாமங்கள். சோரம், கள்ளம் என்பதெல்லாம் திருட்டையல்லவா குறிக்கும்? 

அப்படியென்ன செய்தார் பெருமாள் என்கிறீர்களா? அதையும் காணலாம் வாருங்கள். 

"வைகுண்டநாதா, இன்று அடிக்கும் கொள்ளையில் வழக்கம்போல்தான் உனக்குப் பங்கு. அரண்மனை என்பதால் அதிகம் கேட்காதே' என்று எச்சரித்துவிட்டுப் புறப்பட்டான் காலதூஷகன். பாதித் திருட்டில், அவனுடைய ஆட்கள் காவலாளிகளிடம் சிக்கிக் கொண்டார்கள். காலதூஷகன் தப்பிவிட்டான். ஆனால், விசாரணையின்போது, தாங்கள் காலதூஷகனின் ஆட்கள் என்பதைக் கூறி, அவனுடைய இருப்பிடத்தையும் காட்டிவிட்டனர். 
"பெருமாளே, அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்று' - காலதூஷகன், வைகுண்டநாதரிடம் வேண்டினான். 

அடுத்த நாள் காலையில், காவலாளிகளிடம் காலதூஷகன் சிக்கினான். கொண்டுபோய் அரசரிடம் நிறுத்தினார்கள். "ஏன் இப்படிச் செய்தாய்?' என்று கேட்டுக் கொண்டே எழுந்த அரசருக்கு, ஏதோ தட்டுப்பட்டது. உற்றுப் பார்த்தார். உண்மை புரிந்தது. எதிரில் காலதூஷகன் அன்று; காலதூஷகன் வடிவில் நின்ற சாக்ஷôத் வைகுண்டவாசன். 

பிரமித்து விழித்த அரசருக்கு, வைகுண்டவாசன் முழுமையாகக் காட்சி தர, ஓடிச் சென்று திருவடிகளில் பணிந்தார். 

"இதென்ன விளையாட்டு? என்னிடம் கொள்ளையடிப்பதன் உள்ளர்த்தம்..?' என்று அரசர் வினவ......

"நீ நல்லவன் என்றாலும், தர்ம வழிகளில் உன் செல்வத்தைச் செலவிட மறந்தாய். தர்ம வழியில் செலவிடப்படாத செல்வத்தைத் திருடர் அபகரிப்பர்; அக்னியும் அழிக்கும்; நோய்கள் கொண்டு செல்லும். இந்தப் பாடத்தை உனக்குப் புகட்டவே விழைந்தோம்' என்று விடை வந்தது. அன்று முதல், காலதூஷகனும் மனம் திருந்த, அரசரின் நண்பனாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டான். 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com