எப்போதும் நேர்மையும் தூய்மையும் நிறைந்த பக்தி வாழ்க்கை வாழ வேண்டும்; பகவானது நாமங்களை உள்ளன்புடனும் பக்தி சிரத்தையுடனும் உச்சரிப்பதே மிகவும் சிறந்தது.
-ஸ்ரீ கிருஷ்ணசைதன்யர்
எத்தகைய பக்தியைக் கொண்டிருப்பவர்களுக்கும் மோட்சம் அளிக்கக் கூடியவன் ஸ்ரீ ராமபிரான். ஒருவனுக்கு அன்பே உருவம் கொண்டவனாகிய ஸ்ரீ ராமபிரானிடம் பக்தி தோன்ற வேண்டும். அவ்விதம் தோன்றாவிட்டால் அவனைப் பெற்ற தாய், "தாய்மை' என்ற பெருமையைப் பூரணமாக அடையாதவள்தான். அத்தகையவள் சத்துவ குணம் நிறைந்த மகனை விரும்பாமல், வெறும் காம வாசனைக்காகத் தன் உடலைக் களங்கப்படுத்திக் கொண்டவள் ஆகிறாள்.
-துளசிதாசர் (விநயபத்ரிகா)
""நாடீர் நாள்தோறும் வாடாமலர்கொண்டு
பாடீர் அவன் நாமம்; வீடே பெறலாமே.''
பொருள்: அன்று மலர்ந்த மலர்களைக் கொண்டு நாள்தோறும் (பெருமானை) அர்ச்சனை செய்து வணங்குங்கள். அவன் திருப்பெயர்களைச் சொல்லிப் பாடுங்கள். அவ்விதம் செய்தால் நீங்கள் மோட்சம் பெறலாம்.
-ஸ்ரீ நம்மாழ்வார், திருவாய்மொழி 10.5.5.
""மந்திர நமச்சிவாய
ஆகநீறு அணியப் பெற்றால்
வெந்து அறும் வினையும் நோயும்
வெவ்வழல் விறகிட்டு அன்றே.''
பொருள்: "நமசிவாய' என்ற மந்திரத்தை ஜபம் செய்து திருநீறு அணிய வேண்டும். அவ்விதம் செய்தால், வினையாகிய நோய், எரியும் நெருப்பில் போடப்பட்ட விறகுபோல் அழிந்துபோகும்.
கங்கைக்குச் சமமான தீர்த்தம் இல்லை, பெற்ற தாய்க்குச் சமமான குரு இல்லை. பகவான் விஷ்ணுவிற்குச் சமமான கடவுள் இல்லை. அதேபோல் குருவைவிடச் சிறந்த தத்துவம் கிடையாது.
-சனக மகாமுனிவர்