
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: உங்களிலிருந்தே உங்களுடைய மனைவியரை அவர்களின் மூலம் நீங்கள் மனநிம்மதி பெறும் பொருட்டு, உங்களுக்காக அவன் படைத்ததும், உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் அவன் ஆக்கியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
அல்லாஹ், முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களையும், அவரின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா என்ற முதல் பெண்ணையும் அல்லாஹ் படைத்தான். சுவனத்தில் ஆதம் அவர்கள் ஒருமுறை ஆழ்ந்து உறங்கி விழித்தெழிந்து பார்க்கும்போது அவரருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவர்தான் ஹவ்வா ஆவார்.
"நீ ஏன் படைக்கப்பட்டுள்ளாய் ?' என்று ஆதம் அவர்கள் ஹவ்வாவிடம் கேட்க, "நீங்கள் என் மூலம் நிம்மதி பெறுவதற்காக' என்று ஹவ்வா பதிலளித்தார்' என நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள்.
சுவனத்தில் செய்த பாவத்திற்கு மன்னிப்புத் தேடி வந்த இடமே இவ்வுலகம். நாம் இன்பம் அடைவதற்காக வந்த இடமல்ல இவ்வுலகம். தவறுக்கு பிராயசித்தம் தேடிக் கொள்ள வந்த இடம். வந்த வேலையை விட்டுவிட்டு கணவனும் மனைவியும் சேர்ந்து மென்மேலும் இறைக்கட்டளைக்கு மாறு புரிந்தால், மரணத்திற்குப் பிறகு சுவர்க்கம் செல்வதற்குப் பதிலாக நரகம் செல்ல நேரிடும்.
சுவர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மரத்தின் கனியை ஆதம், ஹவ்வா இருவருக்கும் தடுத்திருந்ததைப் போல், இவ்வுலகத்தில் நமக்குச் சில செயல்களைக் கூறி, இவற்றை விட்டு விலகி நடக்க வேண்டும். சில செயல்களைக் கூறி இதன்படி நடக்க வேண்டும் என்று இறைத்தூதர்களின் மூலம் வழியாட்டியுள்ளான். இது நமக்கான சோதனை.
தடுக்கப்பட்ட கனியை அவ்விருவரும் உண்டதனால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம். இப்போதுள்ள கணவனும், மனைவியும் சேர்ந்து தடுக்கப்பட்டதைச் செய்தால் பின்விளைவு கடுமையாக இருக்கும். ஆகவே, அல்லாஹ்விடம் மன்னிப்பும் கருணையும் கிடைக்ககூடிய வகையில் கணவன் - மனைவி வாழ வேண்டும்.
கணவன் கோபித்துக்கொள்வார் என்று மனைவி பாவத்திற்கு துணை போவதும், மனைவி கோபித்துக்கொள்வாள் என்று கணவன் பாவத்திற்கு உதவி புரிவதும் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நல்லதல்ல.
கணவனிடமிருந்து வழிகாட்டுதலும், மனைவியிடம் வழிப்படுத்துதலும் இருக்க வேண்டும். இதுவே நல்ல கணவன் மனைவியின் அடையாளம்.
பெண்ணை நிம்மதியும் ஆறுதலும் அளிக்கக்கூடிய தன்மையுள்ளவளாக அல்லாஹ் படைத்திருக்கிறான். மனைவி கணவனுக்கு உதவியுள்ளவளாக, நிம்மதி அளிக்கக்கூடியவளாக இருக்க வேண்டும். இது நியதி. மனைவியானவள் அல்லாஹ் வகுத்துள்ள வரம்புகளை மீறி குணம் கெட்டு நடந்தால், கணவனுக்கு இவ்வுலகமே நரகமாகிவிடும்.
இஃதல்லாமல், மனைவி கணவனை அடக்கியாள நினைப்பது, மனைவியின் சொல் கேட்டு நடப்பது, மனைவி குணம் கெட்டு நடப்பது ஆகியவை அல்லாஹ்விடம் பொருத்தமற்ற செயலாகும்.
-ஹாஜி முகம்மது அன்வர் தீன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.