மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் நடைபெறுகின்ற பூஜை புனஸ்காரங்களைச் செய்ய கோயில் அர்ச்சகர்கள் இல்லை. சித்தர் பீடத்தின் கீழ் இயங்கி வரும் வாரவழிபாட்டு மன்றங்கள், சக்திபீடங்களைச் சேர்ந்த பெண்களே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் வந்து மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளையும், ஆன்மிக பணிகளையும், சித்தர்பீட தொண்டுகளையும் செய்து வருகின்றனர்.
இந்திய நாட்டில், பெண்கள் கோயிலில் பூஜைகளைச் செய்வது காசியில் மட்டும் என கூறப்படுகிறது. அதற்கு அடுத்ததாக, தமிழகத்திலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில்தான் நடைபெற்று வருகிறது.
இங்கு 18 சித்தர்களின் தலைவியாய், அருள்பாலித்து வரும் ஆதிபராசக்தி தேவி இருந்து வருவதால், இந்த கோயில் "ஆதிபராசக்தி சித்தர்பீடம்' என்றே பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. சித்தர்பீடத்திற்கு வருகின்ற பக்தர்கள் கருவறை அம்மனையும், பங்காரு அடிகளாரையும் வழிபாடு செய்ய அலைமோதுகின்ற நிலை உள்ளது.
அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடிமாதம் திகழ்வதால், இந்த பீடத்தில் மாபெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆடி மாதத்தை முன்னிட்டு, ஆடிப்பூர விழாவில் கஞ்சி வார்த்தல், அம்மனுக்கு பாலாபிஷேகம் ஆகிய இரு நிகழ்ச்சிகள் அடிகளார் முன்னிலையில் நடைபெறும்.
ஏழை பணக்காரர், உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடின்றி பக்தர்கள் கொண்டு வந்த கஞ்சியைத் தொட்டிகளில் ஊற்றி, வரிசையில் வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வாக பாலாபிஷேகம் கருதப்படுகிறது. பூரம் நட்சத்திரத்தன்று, மூலவர் சந்நிதியில் உள்ள சுயம்பு திருவுருவத்துக்கு பக்தர்கள் தாம் கொண்டு வந்த பாலை தம் கையால் பாலாபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஆடிப்பூர விழா ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதி களில் இருநாள்கள் எளிமையாக நடைபெறுகின்றது. இது மேல்மருவத்தூரில் நடைபெறும் 50-ஆம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழாவாகும்..!