சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

•••

சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் திறமை கூடத் தொடங்கும். அசாதாரணமாக புதிய செயல்களைச் செய்வீர்கள். செய்தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். வருமானம் படிப்படியாக உயரும். மன அழுத்தம், டென்ஷன் எதுவும் இல்லாமல் தெளிந்த மனதுடன் காரியங்களையாற்றுவீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்து காணப்படும். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். நண்பர்களும் உங்கள் செயல்பாடுகளில் பங்கு கொண்டு உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். மற்றபடி கால நேரங்களை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பழைய வம்பு வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேக நலம் மேம்பட வெளி விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் எவரிடமும் அநாவசியமாக வாக்குவாதம் செய்து மனநிலையைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். 



01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் உள்ள பிரச்னைகளை உறுதியுடன் எதிர்கொள்வீர்கள். உங்கள் சூட்சும அறிவால் புதிய வழிகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். சமுதாயத்தில் பெருந்தன்மையாக நடந்து கொள்வீர்கள். அனைத்து செயல்களிலும் நல்லவற்றையே பார்ப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை வெற்றியைக் கொண்டு சேர்க்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொருளாதாரம் மேன்மையாகவே தொடரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள், வில்லங்கங்கள் மறையும்.  உங்கள் முகத்தில் வசீகரமும் நடையில் மிடுக்கும் உண்டாகும். 
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உங்கள் கடமைகளை கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள், சஞ்சலங்கள் மறையும். சக ஊழியர்கள் முழுமனதுடன் ஒத்துழைப்பு நல்குவார்கள். 

வியாபாரிகள் நடைமுறையில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கொள்முதல் செய்வார்கள். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். வியாபாரப் பிரதிநிதிகளை ஊக்குவித்து, உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும் ஆண்டாக இது அமையும். 
விவசாயிகளுக்கு இந்த ஆண்டு வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். ஊடுபயிராக தானியங்களைப் பயிரிட்டு லாபம் பெறுவீர்கள். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விட்டு, வங்கியிடமிருந்து புதிய கடன்களை மானியத்துடன் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடம் அனுசரணையாக நடந்து கொள்ளும். உங்கள் கோரிக்கைகள் கரிசனத்துடன் பரிசீலிக்கப்படும். உறுதியுடனும் தெளிவுடனும் உங்கள் காரியங்களைச் செய்வீர்கள். எதிர்க்கட்சியினரின் பேச்சுக்களையும் கவனித்து அதற்குத் தக்க பதிலடி கொடுப்பீர்கள். கட்சியில் உங்களுக்கென்று தனி இடத்தைப் பிடித்து விடுவீர்கள். 
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடாமலேயே கிடைக்கும். முயற்சிகளைச் சீர்ப்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். சக கலைஞர்களுடன் வெளியூர் சென்று கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். உயர்ந்தவர்களின் சந்திப்பால் உங்கள் பெருமை கூடும். 
பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையுடன் பழகுவீர்கள். குடும்பத்திலும் ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். ஆன்மிகத்திலும் ஆலயத் திருப்பணிகளிலும் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். உடல் வலிமை பெற உடற்பயிற்சிகளையும், மன வளம் பெற யோகா, பிராணாயாமம் போன்றவற்றையும் செய்வீர்கள். சக மாணவர்கள் நட்புடன் பழகுவார்கள்.

பரிகாரம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

•••

கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)


01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு தெளிவும், தீர்வும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். செய்தொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள்.  குடும்பத்தில் அமைதி நிலவும். மற்றபடி உடலில் இருந்த சோர்வுகள் அகன்று சுறுசுறுப்பு கூடும். குழந்தைகளை நல்வழிப்படுத்துவீர்கள். உங்கள் ஆன்மிக பலம் கூடும். நெடுந்தூர திருத்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். வருமானத்தின் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.



வெளியில் கொடுத்திருந்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். கடன் சார்ந்த பிரச்னைகள் குறையும். கடன் தவணைகளையும் குறித்த காலத்திற்குள் செலுத்தி விடுவீர்கள். உடலாரோக்கியத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். உங்கள் சாதுர்யமான பேச்சினால் செயற்கரிய சாதனைகளைச் செய்து முடிக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 
01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் அரசு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். நிலுவையில் இருந்த தொகை உங்கள் கை வந்து சேரும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்து முடித்து விடுவீர்கள். செய்தொழிலில் நண்பர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். அதோடு செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உங்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்கள் விலகிவிடுவார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து புகழ், கெüரவம், பாராட்டு, பரிசு ஆகியவைகள் கிடைக்கும். அதேநேரம் பிறருக்கு வாக்கு கொடுக்கும் நேரங்களில் கவனமாக இருக்கவும். மற்றபடி கடினமான நேரங்களில் இறைநம்பிக்கை உங்களுக்குக் கைகொடுக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் நன்கு திட்டமிட்டு வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து விடுவார்கள். தடைகளை தாண்டி வெற்றி பெறுவார்கள். ஊதிய உயர்வைக் கேட்டுப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்கள் புகழ், அந்தஸ்து உயர்ந்து காணப்படும்.  

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பார்கள். விற்காமல் தேங்கிவிட்ட பொருள்களை குறைந்த விலைக்கு விற்று, விரைவில் விற்கும் பொருட்களை வாங்கி லாபம் காண்பார்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களின் அலட்சியப் போக்கை பெரிதுபடுத்த வேண்டாம். கூடுமானவரையில் கடனுக்கு பொருட்களை விற்க வேண்டாம். 

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். அதேநேரம் நஷ்டம் என்று எதுவும் ஏற்படாது; புதிய பயிர்களைப் பயிரிட்டு பலன் பெறுவீர்கள். நிலம் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எளிதில் முடியும் என்று எதிர்பார்த்த சில காரியங்கள் சற்று தாமதமாகவே முடிவடையும். 

அரசியல்வாதிகள் மனதில் புது விதமான சிந்தனைகள் உண்டாகும். கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கட்சி மேலிடம் உங்களைப் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். தொண்டர்களின் ஆதரவும் நிரம்பக் கிடைக்கும். 

கலைத்துறையினர் தங்கள் பணிகளை திட்டமிட்டு, எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றுவீர்கள். ரசிகர்
களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். சமூகத்தில் 
உங்கள் பெயர், கௌரவம் படிப்படியாக உயரத் தொடங்கும் ஆண்டாக இது அமைகிறது. 

பெண்மணிகள் எதிர்பாராத பண வருவாயைப் பெறுவார்கள். குடும்பத்தில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். கணவருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து விடும். குழந்தைகளையும் கவனித்து நல்வழிப்படுத்துவீர்கள். 

மாணவமணிகள் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மனதில் புதிய சிந்தனைகள் உதிக்கும். உங்கள் தனித்திறமை பளிச்சிடும்.
பரிகாரம்: அம்மன் வழிபாடு உகந்தது.

•••

துலாம்

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள். புத்தி சாதுர்யம் கூடும். உங்களை நம்பி வந்தவர்களைக் கைவிட மாட்டீர்கள். வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும்.  மருத்துவச் செலவுகள் குறையத் தொடங்கும்.  மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மனதில் உண்டாகும் சிந்தனைகளுக்கு புது வடிவம் கொடுப்பீர்கள். அசையாச் சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.  

உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தக்க அறிவுரை, ஆலோசனைகளைக் கூறி, உதவிகளைச் செய்வீர்கள். அரசு அதிகாரிகளின் ஆதரவைத் தேடிப் பெறுவீர்கள். சிறு தூரப் பயணங்கள் மூலம் வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 
01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். போட்டியாளர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வீர்கள். எவரிடமும் தேவையில்லாத முன் கோபத்தைக் காட்ட வேண்டாம். உடல் நலம் பேண, சரியான நேரத்தில் ஆகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றி மறையும். பெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் உண்டாகும். உங்கள் திறமைக்கேற்ற பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவீர்கள். உடலாரோக்கியம் சீராகவே தொடர்ந்தாலும் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். 



குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து அவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகவே முடியும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களிடம் பகைமை பாராட்டிய சக ஊழியர்கள், பகைமை மறந்து நட்பு பாராட்டுவார்கள். வாகனம், வீடு வாங்குவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடன்கள் கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கடினமான தருணங்களில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். அலுவலக ரீதியான பயணங்கள் வெற்றியுடன் நிறைவேறும். 

வியாபாரிகள் சுக செüகரியங்களைப் பாராமல் உழைத்து வருமானம் ஈட்டுவார்கள். புதிய வியாபாரம் தொடங்க, திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். துணிவுடன் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். கூட்டாளிகளுடன் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் இரட்டிப்பாக இருக்கும். நீர்வரத்து அதிகரிக்கும். விவசாய தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கால்நடைகளாலும் அதிக நன்மை உண்டாகும். 

அரசியல்வாதிகள் கட்சியில் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வருமானம் படிப்படியாக உயரும். முக்கியமான தருணங்களில் வேகத்தை காட்டாமல் விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். வாக்குவன்மை மூலம் ஆதாயம் உண்டு. மற்றபடி உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கட்டும். 

கலைத்துறையினருக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் உண்டாகும். பொருளாதார வசதி மேம்படும். சொத்து சுகங்கள் சேரும். 

பெண்மணிகள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனம் தெளிவாக இருக்கும். பெற்றோரிடமும் அன்புடன் பழகுவீர்கள். எதிர்பாராத தனவரவு மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையல்ல.

மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். விரும்பிய மேற்
படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

•••

விருச்சிகம்

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)


01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் அதிர்ஷ்டவசமாக உங்களைத் தேடி வரும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து உங்களைத் திக்குமுக்காட வைக்கும்.  செய்தொழிலில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப உங்களை மாற்றிக் கொண்டு விடுவீர்கள். சமூகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். பெற்றோர்களுக்கு ஆதரவாக நடந்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் புதிய நுட்பங்களைக் கற்றுக்கொள்வீர்கள். எதிர்வரும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.  



உடன் பிறந்தோரின் பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்பீர்கள்; அதற்குண்டான தீர்வையும் உருவாக்கிக் கொடுப்பீர்கள்.  நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் திடீரென்று நல்லபடியாக நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரத் தொடங்கும். அதேநேரம் புகழை விரும்பி எந்த காரியத்திலும் உங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்றால் மிகையாகாது. 
01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். பல வகையிலும் வருமானம் வரத்தொடங்கும். செய்தொழிலில் திறமையாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை பலப்படும். நம்பகமானவர் என்று சமுதாயத்தில் பெயரெடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும்.  புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத சலுகைகள் வந்து சேரும். போட்டியாளர்களின் சதியை முன்னாலேயே புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல் திட்டங்களை மாற்றிக் கொண்டு வெற்றியடையும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் யாவும் சுமூகமாக முடிவடையும். உங்கள் வேலைகளைப் பட்டியலிட்டு, கவனம் சிதறாமல், சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். அலுவலக ரீதியான பயணங்கள் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அதேநேரம், வேலை மாறும் எண்ணத்தைத் தள்ளிப் போடவும். 
வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடுபிடிக்கும். வருமானம் கூடத் தொடங்கும். கூட்டாளிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உபரி வருமானத்தால் கடையை புதுப்பிப்பீர்கள். மறைமுகப் போட்டி என்று எதுவும் இராது. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். 
விவசாயிகளுக்கு விளைபொருட்கள் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். கை நழுவிப்போன குத்தகையும் திரும்பக் கிடைக்கும். கால்நடை பராமரிப்புக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். சாதுர்யமான செயல் பாட்டின் மூலம் விளைச்சல் அதிகரிக்கும் ஆண்டாக இது அமைகிறது. 

அரசியல்வாதிகள் கட்சியில் பெருமை அடைவார்கள். நிர்வாகம் சார்ந்த பணிகளில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். சந்தோஷம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். 
கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகமடைவீர்கள். புதிய படைப்புகளைப் படைப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் செய்ய வாய்ப்புகள் தேடிவரும். 

பெண்மணிகள் சிறப்பான வருமானத்தை ஈட்டுவார்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். விடியற்காலையில் எழுந்து படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலர் புதியதாக வேற்று மொழிகளைக் கற்க ஆசைப்படுவீர்கள். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். 

பரிகாரம்: ராதாகிருஷ்ணரை வழிபட்டு வரவும்.


2022-இல் உண்டாகும் நன்மைகள்!

சனி பகவான் வலுத்திருந்தால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் மூலம் லாபம் அடைதல், கண்ணாடி பொருள்கள், பிளாஸ்டிக் வியாபாரம் இவற்றால் நன்மை அடைதல், கரும்பு பயிர், எண்ணெய் வகைப் பொருள்கள், பங்கு வர்த்தகம், கடல்வழி சம்பந்தப்பட்டவை, நாடகத்துறை, கலைத்துறை, கேளிக்கை, ஆகாயம் சம்பந்தப்பட்டவை, போக்குவரத்து ஆகிய துறைகளின் மூலம் வருமானம் அமையும். அதோடு திடீர் திருப்புமுனைகள், கெட்டவர்களால் நன்மை, எந்த ஒரு கஷ்டத்திற்கும் விடிவுகாலம், பூர்வீக வழியில் லாபம், வெளிநாடுகளிலிருந்து தொடர் வருமானம் ஆகியவைகளும், தர்ம காரியங்கள், சமுதாய பொது நலப் பணிகளைச் செய்வதன் மூலம் பெயர், புகழ் உண்டாகுதல். கருப்பு நிற இனங்கள், கமிஷன் தொழில், விவசாயம், அசையாச் சொத்துக்கள் சேர்க்கை ஆகியவைகளும் உண்டாகும்!
12 ராசிகளின் மொத்த அளவு 360 பாகைகள் என்பதை அனைவரும் அறிந்ததே! இதை மூன்றால் வகுத்தால் 120 பாகைகள் வருகின்றன. லக்னம் முதல் திரிகோணம் அதிலிருந்து 120 பாகைகள் முடிந்தவுடன் இரண்டாவது திரிகோணம் தொடங்குகிறது. 
ஐந்தாம் வீட்டிலிருந்து 120 பாகைகள் முடிந்தவுடன் மூன்றாவது திரிகோணம் தொடங்குகிறது. இதனால் மூன்று திரிகோண வீடுகளும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று புரிந்துகொள்ள 
முடிகிறது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com