தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

2022-ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
மார்ச் மாதப் பலன்கள்
மார்ச் மாதப் பலன்கள்

2022-ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இந்த சுபகிருது வருஷத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உற்றார் உறவினர்கள் உடன் பிறந்தோர் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தையும், மன வளத்தையும் மேம்படுத்திக்கொள்ள தேவையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். 

குடும்பத்தில் உங்கள் மதிப்பு கூடும். செய்தொழிலில் வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். நண்பர்கள், கூட்டாளியிடம் இருந்த பிணக்குகள் நீங்கி இணக்கமான சூழல் உண்டாகும். முடங்கி நின்ற காரியங்கள் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளும், குழந்தை பிறப்பும் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றியுடன் முடித்து விடுவீர்கள்.

அரசாங்கத்திலிருந்து உதவிகளை பெற்று பயனடைவீர்கள். வெளியூர் வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள். புனித யாத்திரை மற்றும் குலதெய்வப் பிரார்த்தனை ஆகியவைகளையும் மேற்கொள்வீர்கள். தெளிவாக சிந்தித்து புதிய கோணங்களில் செயல்படுவீர்கள். வழக்குகளிலும் நுணுக்கமான விஷயங்களையும் புரிந்துகொள்வீர்கள். மற்றபடி புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும் கால கட்டமிது.  

இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் துரிதமாக வளர்ச்சியடைவீர்கள். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் சூழ்நிலைகளை மகிழ்ச்சிகரமாக மாற்றிக் கொள்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களையும் வசூலிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முதலீடுகளில் புதிய தொழில்களைத் துவங்குவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது துறையில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளை கேட்டு செய்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்வீர்கள். மற்றபடி உங்கள் உடல் உழைப்புக்கு பன்மடங்கு லாபங்கள் கிடைக்கும் கால கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  

உத்யோகஸ்தர்கள்  உற்சாகத்தை அலுவலக வேலையில் காட்டுவீர்கள். நீங்கள் பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். புது ஊதியங்களின் நம்கத்தன்மையை அறியாமல் எந்தவொரு அலுவலக விஷயங்களையும் பகிராதீர்கள்.  

வியாபாரிகளுக்கு அதிகமான மகிழ்ச்சி சில பிரச்னைகளை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களுடன் வாய்த் தகராறு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மனநிலைபாதிக்கப்படாமல் இருக்க நல்லுறவு பேணுங்கள். புதிதாக தொழிலை விரிவுபடுத்தும்போது எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

விவசாயிகள் குறுகிய மனநிலை போக்கைத் தவிர்த்திடுங்கள். உங்களுக்கு தூண்டுதல் தரும் உணர்வுகளை அடையாளம் காணுங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால், பண நிலைமை மேம்படும். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள்.

அரசியல்வாதிகள்  தொண்டர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்த நல்ல ஒத்துழைப்புடன் செயல்படுங்கள். உங்கள் துறையில் வரம்பில்லாத வெற்றியை எட்டப்போகிறீர்கள். உங்கள் கை ஓங்க, எல்லா முயற்சிகளையும் எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு  நம்பிக்கையுடன் பழகும் ஒருவரால் செலவுகள் அதிகரிக்கும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும். உங்கள் திறமை மேலோங்கும். கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து கையொப்பமிடுவீர்கள்.

பெண்மணிகள் உங்கள் கனவுகளை நனவாக்க பிள்ளைகளை தயார்படுத்துங்கள். உங்கள் துணையுடன் இன்பமாக இருப்பீர்கள்.  

மாணவமணிகளுக்கு  பள்ளியில் மூத்த மாணவர்களால் அதிருப்தியும் சிறிது அழுத்தமும் ஏற்படும். சூடான வாக்குவாதத்திற்குப் பிறகு பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள். மடிக்கணினியில் நேரத்தை உருப்படியாக செலவழிக்கவும்.

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும்.

********

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

இந்த சுபகிருது வருஷத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் செய்தொழிலில் படிப்படியான உயர்வைக் காண்பீர்கள். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள ஆழமாக விசாரித்தறிவீர்கள். செய்தொழில் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் நட்பைத் தேடிப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உடன் பிறந்தோரின் சிறு குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். அசையாச் சொத்துகள் வாங்க முன் பணம் கொடுப்பீர்கள். 

மனதிற்கினிய பயணங்களையும் செய்ய நேரிடும். இதன் மூலம் ஒன்றுக்கு இரண்டாய் நன்மைகளைப்  பெறுவீர்கள். உங்கள் ஆற்றல், தனித்தன்மை கூடும். மக்கள் நலம் அபிவிருத்தியடையும். குழந்தைச் செல்வத்தை எதிர்பார்த்திருப்பவர்கள் மழலைச் செல்வத்தைப் பெறுவார்கள். சிலருக்கு பங்கு வர்த்தகத்தின் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கும். உடல் நலம், மனவளம் சீர்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும் கால கட்டமாக இது அமைகிறது. 

இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். வீட்டிலும், வெளியிலும் உங்கள் பெயர், புகழ் உயரத் தொடங்கும். உங்கள் பொதுக் காரியங்களுக்கு புது அங்கீகாரம் கிடைக்கும். அலைபாயும் மனது தெளிந்த நீரோடைப் போலாகும். நண்பர்களின் குறைகளைப் பெரிது படுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். 

உடலிலிருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். கடினமாக உழைப்பீர்கள். உழைப்புக்குத் தகுந்த வருமானமும் கிடைக்க தடை இராது. அதோடு நிலைமைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோர்கள் வழியில் இருந்த மனத் தாங்கல்கள் தீர்ந்து குடும்பத்தில் குதூகலங்களைக் காண்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவுமிராது. மேலும் இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கும் கால கட்டமிது என்றால் மிகையாகாது.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பாராத நேரத்தில் சில மாற்றங்கள் உருவாகலாம். புத்திசாலியாக செயல்பட்டு, கஷ்டங்களை களைத்தெறிந்து எண்ணங்கள் பூர்த்தியாகும்படி நடந்து கொள்வீர்கள். மூத்தோர்களை சந்தித்து உற்சாகம் அடைந்து ஆசிர்வாதம் பெறுவீர்கள். புதிய ரகசியங்களும் உங்கள் காதுக்கு வந்தடையும்.  
வியாபாரிகள் இந்த சுபகிருது வருடத்தில் வாடிக்கையாளர்களை அன்புடன் நடத்தி லாபம் ஈட்டுவீர்கள். வரவு } செலவுகளைக் கவனத்துடன் கையாண்டு சேமிப்பை அதிகரித்துக் கொள்ளலாம். 

விவசாயிகள் விளை பொருள்களின் விற்பனையால் நல்ல லாபமீட்டுவீர்கள். விவசாய பிரச்னைகளில் சுமுகமான தீர்ப்பை காண்பீர்கள். விளைபொருள்களையும் பால் பொருள்களையும் சந்தையில் விற்று நல்ல லாபம் ஈட்டுவீர்கள்.

அரசியல்வாதிகள் பழைய காலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முற்படுவீர்கள். கட்சி மேலிடத்தினரால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினர் ரசிகர்களின் ஏகோபித்த அன்பினால் "சவால்' விடும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பாராட்டைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்திலுள்ளவர்களிடம் அன்புடனும், அன்யோன்யத்துடனும் பழகுங்கள். உறவினர்களால் சில கலகங்கள் உருவாகலாம். மெüனம் கலக நாஸ்தி என்பதற்கிணங்க வார்த்தைகளைக் கொட்டாமல் அமைதி காக்கவும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகளை ஏற்று நடத்தி மகிழ்வீர்கள். 

மாணவமணிகள் பொறுப்புடனும், கவனத்துடனும் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். வெளி விளையாட்டுகளில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். வெளிநாட்டில் படிப்பைத் தொடரும் முயற்சியில் இறங்குவீர்கள்.

பரிகாரம்:  சிவபெருமானை வழிபட்டு வரவும்.

********

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

இந்த சுபகிருது வருஷத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் செய்தொழிலில் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். நண்பர்கள், கூட்டாளிகல் தேடி வந்து உதவி செய்வார்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளமைப்பீர்கள். பொருளாதார முன்னேற்றத்தில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். நாட்பட்ட உடல் உபாதைகளிலிருந்து விடுதலையாகி மகிழ்ச்சியாக வெளியில் சென்று வருவீர்கள். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்துவிட்டு, நம்பிக்கை சின்னமாகக் காட்சியளிப்பீர்கள். விட முடியாமலும், பிடித்துக் கொண்டிருக்கவும் முடியாது தவித்த விஷயங்கள் நல்லபடியாக முடியும். உங்களின் ஆழ்ந்த நுண்ணிய அறிவை அனைவரும் பாராட்டுவார்கள். 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். குடும்பத்தாருடன் கால நேரங்களை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள். முக்கிய முடிவுகளை நன்கு யோசித்து எடுப்பீர்கள். சிலருக்கு சமுதாயத்தில் அதிகார பதவிகளும் தேடி வரும். உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் மறுபடியும் உங்களுடன் இணைந்து இணக்கமாவார்கள். உங்கள் குறிக்கோளை நோக்கி படிப்படியாகப் பயணப்படும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சுய முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துகள் உங்கள் கை வந்தடைந்து அதிலிருந்து வருமானமும் வரத் தொடங்கும். வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் யோசிப்பீர்கள். பழைய கடன்களையும் அடைத்துவிடுவீர்கள். புகழின் உச்சியை நோக்கி படிப்படியாக உயருவீர்கள். 

போட்டிகள், ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். உங்களின் சாதுர்யமான அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்வார்கள். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். உங்களின் புத்திசாலித்தனத்தால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் கால கட்டமிது. 

உத்யோகஸ்தர்கள் சக பணியாளர்களிடம் எந்த ரகசியங்களையும் கூறாதீர்கள். அலுவலகத்தில் நிறைய குழப்பமான சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளினால் கெடுபிடிகள் உருவானாலும் உங்களது நிர்வாகத் திறமையினால் சமாளிப்பீர்கள். எவரிடமும் வீண்பேச்சுகளை பேசாமல் வேலையில் கவனத்தை வைப்பது உத்தமம். 
வியாபாரிகள் உழைப்பை கடுமையாக்கி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். கூட்டாளிகளினால் சிறு பிரச்னைகள் உருவாகும். சாதுர்யமாகச் சமாளிக்கவும், அகலக்கால் வைக்காது வியாபாரத்தில் ஈடுபடவும். 

விவசாயிகள் கடின உழைப்பினால் விவசாயக் கூலிகளோடு சேர்ந்து நீங்களும் உழைத்து மகசூலைப் பெருக்குவீர்கள். வெளிச் சந்தையில் உற்பத்தி செய்த பொருள்களை நல்ல விலைக்கு விற்று லாபம் ஈட்டுவீர்கள்.

அரசியல்வாதிகள் மறைமுக எதிரிகளையும் தன்வசப்படுத்தி தொல்லைகள் நீங்குமாறு நடந்துகொள்வீர்கள். பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வீர்கள். பிரயாணங்களினால் நிறைய நன்மைகள் வந்தடையும். 

கலைத்துறையினருக்கு புதுப்புது ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சக கலைஞர்களின் ஒத்துழையாமையினால் சற்று மனவருத்தம் உண்டாகும். ரசிகர்களின் நலத்திட்டங்களில் பங்கேற்று உதவி புரிவீர்கள். 

பெண்மணிகள்  குடும்பத்தில் புது வருகையாக மழலையின் வருகை அனைவரிடையையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவரின் பரஸ்பரம் அன்பு மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களை சற்று அனுசரித்து நடந்து வாழ்க்கையை சிறப்பானதாக்கி மகிழுங்கள். 

மாணவமணிகள் விடியற்காலையிலேயே விழித்தெழிந்து அன்றாடப் பாடங்களை படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது தேர்வு சமயங்களில் பேருதவியாக நிறைய மதிப்பெண்களை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். பெற்றோர் சொற்படி நடந்து வாழ்க்கையை சிறப்பானதாக்குங்கள்.

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.

********

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இந்த சுபகிருது வருஷத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் நெடுநாள் பூர்த்தியாகா விஷயம் பூர்த்தியாகும். மனஅழுத்தங்களிலிருந்து விடுபடுவீர்கள். புத்துணர்ச்சியுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவீர்கள். பொருளாதார வளம் உயர்வதற்கான வழிகளைப் பின்பற்றுவீர்கள். உங்கள் பேச்சில் கண்ணியம் காப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோரும் உங்களைப் பாராட்டுவார்கள். 

உற்றார் உறவினர்கள், உடன்பிறந்தோருடன் இணக்கமான உறவு தொடரும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து கெüரவம் உயரும். உங்களின் நேரான எண்ணங்களால் வாழ்க்கைத் தரம் உயரும். புதிய பொறுப்புகளை கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கூடும். பயணங்களால் சிலருக்கு குருட்டு அதிர்ஷ்டம் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் துணிவும் தைரியமும் உண்டாகும் கால கட்டமிது.

இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் சமூகத்தில் பிரபலஸ்தர் என்கிற நிலைக்கு உயர்வீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். குழந்தைகளை வெளியூர் வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துகளை வாங்குவார்கள். நீங்கள் செய்யும் புதிய முயற்சிகள் நீங்கள் எதிர்பாராத வகையில் நன்மையாக அமையும். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். 

குடும்பத்துடன் ஆன்மிக திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் சமயத்தில் பெரியோர்கள் நல்வழி காட்டுவார்கள். புதிய யுக்தியுடன் எதிரிகளின் செயல்களை முறியடிப்பீர்கள். செயல்களில் வேகத்துடன் விவேகத்தையும் கையாளுவீர்கள். கிடப்பில் கிடந்த நல்ல திட்டங்களை மீண்டும் செயலாற்றும் வாய்ப்பு கிடைக்கும். அதேநேரம் எவருக்கும் முன்ஜாமின் போடுவதோ, உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ வேண்டாம். மேலும் பெற்றோருக்கு சிறிது மருத்துவச் செலவுகள் செய்யும் கால கட்டமிது.
உத்யோகஸ்தர்களுக்கு உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும். வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். சக ஊழியர்கள் அன்புடன் பழகுவார்கள். பிரயாணத்தினால் பல நன்மைகளை அடைவீர்கள். 

வியாபாரிகள் கடன்கள் பாக்கி வசூலாவதில் சற்று நேரிடையாகவே சென்று வசூல் செய்யுங்கள். வழக்கு விவகாரங்கள் சுமுகமாக தீர்ப்பாகும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவு உண்டாகும்.

விவசாயிகள் சிலருக்கு வழக்குகளால் மனநலம் பாதிக்கப்பட்டாலும் முடிவு சாதகமாகவே வரும். கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறுவீர்கள். கால்நடைகளை நன்கு பராமரிக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் அன்பினால் உங்களுக்கு சாதகமாக சில விஷயங்கள் நடந்தேறும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்புடனும், விரைவாகவும் செய்து முடிப்பீர்கள். 
கலைத்துறையினர்  இந்த சுபகிருது வருடத்தில் நிறைய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டாலும் பொருளாதாரம் மேன்மையடைய சில காலங்கள் தாமதமாகும். சிக்கனத்துடன் செலவுகள் செய்யுங்கள். சேமிப்பைக் கூட்டிக் கொள்ளுங்கள். 

பெண்மணிகளுக்கு  கணவர், குழந்தைகளினால் இல்லம் கலகலப்பாகவே இருக்கும். இருப்பினும் சில உறவினர்களினால் கலகங்கள் ஏற்படும். எனினும் அனைவரையும் அனுசரித்து வாழ்க்கையை கலகலப்பாகவும், மகிழ்ச்சியானதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். 

மாணவமணிகள் வெளிநாட்டில் கல்வி கற்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். முடிந்தவரை அன்றாடப் பாடங்களை உடனுக்குடன் படித்து வைத்துக்கொண்டு தேர்வைச் சுலபமாக எதிர்கொள்வீர்கள். யோகா, தியானம் தவறாது மேற்கொண்டு ஆன்ம பலத்தையும், ஆத்ம பலத்தையும் பெருக்கிக் கொள்ளுங்கல்.

பரிகாரம்: ராதாகிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com