ஸ்ரீ ஜகத்குரு பதரீ சங்ரோச்சார்ய சமஸ்தானம், ஸ்ரீ ஷேத்ர சகடபுர ஸ்ரீ வித்யா பீடத்தின் கிளை மடமானது தாம்பரம் கிழக்கில் அகஸ்தியர் தெருவில் (காந்தி பார்க் அருகில்) உள்ளது.
இந்த ஸ்ரீ மடத்தின் முப்பத்து இரண்டாவது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ராமச்சந்திரானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் 1962-இல் இங்கு தங்களது உபாஸனா தெய்வமாகிய ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி தேவியை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்.
ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரும் ஸ்ரீ சகடபுரம் பெரியவரும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். ஒருமுறை ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் இந்தக் கோயிலுக்கு வருகை தந்தபோது அம்பிகையை தரிசனம் செய்து , "அம்பாள் தங்க விக்ரஹம் தானே!' எனக் கேட்டார். ஸ்ரீசகடபுரம் பெரியவரும் புன்னகைத்துக் கொண்டே ஐம்பொன் விக்ரஹம்தான் எனக் கூற, தங்களின் தவ ஆற்றலால் அம்பிகை தங்கமாகவே ஜொலிக்கிறாள் என மகிழ்வுடன் அருளினர்.
"மின் ஆயிரம் ஒரு மெய் வடிவாகி விளங்குகின்றது' என்ற அபிராமி பட்டரின் வாக்கின் வண்ணம் கிழக்கு தாம்பரம் பகுதியே இந்தக் கோயில் உருவான பிறகு மேம்பட்டு இருக்கிறது.
இந்தக் கோயிலை கற்கோயிலாக ஆக்கி 2022} ஆம் ஆண்டு தவச் சக்கரவர்த்தியாகத் திகழும் தற்போதைய பிடாதிபதி ஜகத்குரு ஸ்ரீவித்யாபிநவ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் கும்பாபிஷேகம் செய்து அருளினார்.
தற்போது கிழக்கு தாம்பரம் கிளை ஸ்ரீமடத்தையும், கோயிலையும் திருப்பணி செய்து மே 4}இல் பிரதிஷ்டை வைபவத்தை நடத்தினர். மே 5}இல் (வெள்ளிக்கிழமை) அபிஜித் முகூர்த்தம் நண்பகல் 12 மணிக்கு தமது அமுத பொற்கரங்களால் கும்பாபிஷேகம் நிகழ்த்துகின்றனர்.
ஸ்ரீ வித்யா ராஜ ராஜேஸ்வரி கோயிலில் அம்பிகை கருவறையில் கொலுவீற்று அருளுகின்றாள். அமர்ந்த கோலத்தில் வலக்கரத்தில் தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை, கருங்குவளை ஆகிய ஐந்து மலர்களையும் இணைத்த பூச்சென்டினையும் இடக்கரத்தில் கரும்பு வில்லினையும், மேலிரு கரங்களில் பாசம், அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியவாறும், இடுப்பில் ஒட்டியானம் அலங்கரிக்க, பாதங்களில் சலங்கைகளை சூட்டிக் கொண்டு கண்கொள்ளாக் காட்சியாக அருள்பொழிகின்றாள்.
கீழே மகாமேரு பிரதிஷ்டை செய்யப் பெற்று தினசரி காலை, மாலை வேளைகளில் அபிஷேகம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீலலிதா திரிசதீ அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. கோயிலை வலம் வரும்போது கோஷ்டத்தில் ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீப்ரசன்ன ஆஞ்சநேயர், ஸ்ரீ தத்தாத்ரேயர், ஸ்ரீ பாலசுப்பிரமண்யர் அருள்பாலிக்கின்றார்கள்.
கோயில் பிரகாரத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ நாகேஸ்வரர், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்பிகை ஆகியோர் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். சந்நிதிக்கு இடப்புறம் பதினாறுஅடி உயரமுள்ள கஷ்ட பஞ்சன ஸ்ரீபக்தஆஞ்சநேயர்கூப்பியகரங்களுடன் கம்பீரமாகக் காட்சிஅளிக்கின்றார்.
தினசரி இரவு 7 மணி அளவில் அம்பிகைக்கு ஆனந்த ரதோத்ஸவம் நடைபெறுகின்றது. அம்பிகை ரதத்தில் வலம் வரும்போது நம்மை நேரடியாகப் பார்த்து புன்னகைக்கும் காட்சியை அனுபவிக்கும் போது மெய்சிலிர்க்கும்.
பெüர்ணமி, வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. சங்கடஹர சதுர்த்தியன்று காலை கணபதி ஹோமமும், மாலை சிறப்பு வழிபாடும் நடைபெறுகின்றன. பிரதோஷ தினங்களில் மாலை சிறப்பு வழிபாடும், பாராயணங்களும் நடைபெறுகின்றன.
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு வழிபாடு நடைபெறுகின்றது. தினசரி காலை பூஜை நிறைவு பெற்றவுடன் தீர்த்தப்ரசாதம் வழங்கப்படுகிறது. வேண்டுவோருக்கு வேண்டுவன அள்ளி வழங்கும் அருட்புதையலான அம்பிகையையும், ஸ்ரீ ஸத்குருநாதரையும் வணங்கி நலம் அனைத்தும் பெறுவோம்.
தொடர்புக்கு - 94440 38024