கேசத்தையே விளக்காக ஏற்றிய கணம்புல்லர்!

அறுபது மூவரில் ருவர் தனது திருமுடியால் விளக்கேற்றி, இறைவன் வெளிச்சம் பெற்றிட  தன்னையே தியாகம் செய்தார்.  அவர்தான்  "கணம்புல்ல நாயனார்'.
கேசத்தையே விளக்காக ஏற்றிய கணம்புல்லர்!
Updated on
1 min read

அறுபத்து மூவரில் ஒருவர் தனது திருமுடியால் விளக்கேற்றி, இறைவன் வெளிச்சம் பெற்றிட  தன்னையே தியாகம் செய்தார்.  அவர்தான்  "கணம்புல்ல நாயனார்'.

கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரம்தான் அவரது குரு பூஜை நாளாகும்.

வடவெள்ளாற்றுத் தென் கரையிலேஅமைந்த திருத்தலம் "இருக்குவேளூர்'. சேலம் மாவட்டத்துக்குட்பட்ட வாழப்பாடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள பேளூர் என்பது தற்போதைய பெயராகும்.

இத்தலத்தில் கணம்புல்லர் சிவத்தொண்டு புரிந்து வந்தார்.  இவரிடம் இருந்த செல்வம் கரையத் தொடங்கியது. வறுமை வந்தவுடன் தில்லையம்பதிக்கு குடிபெயர்ந்தார். அங்கே "வியாக்ரபாதர்' என்னும் புலிக்கால் முனிவர் பூஜை செய்த "திருபுலீச்சுரம்' என்னும் கோயிலில் தினசரி ஈசனுக்கு நெய் விளக்கேற்றும் பணியைத் தொடர்ந்தார். 

வயல் ஓரங்களில், ஆற்றுப் பகுதிகளில் இருக்கும் "காநாம்புல்' (வைக்கோல் போன்றது)  என்னும் கணம்புல்லை அறுத்து வந்து, தலையில் சுமந்து வீதிவீதியாகக் கூவி விற்று, அதில் கிடைக்கும் பொருளில் நெய் வாங்கி விளக்கேற்றி இறைவனை வழிபாடு செய்தார்.

ஒருநாள் காலையில் இருந்து மாலை வரை தில்லை நகர் எங்கும் சுற்றியும் புல் விற்பனை ஆகவில்லை. மாலை வந்தது. மயக்கம் வந்தது. ஆயினும் விளக்கேற்ற வேண்டுமே என்ற உறுதி உந்தித் தள்ளிட புல்லையே வைத்து இன்று விளக்காக ஏற்றுவோம் என கணம்புல்லையே திரி போல் ஏற்றிக் கொண்டே இருந்தார். மூன்று யாமங்களே தாங்கியது அந்தப் புல்கட்டு. 

நான்காம் யாமம் பாக்கி இருந்தது. எதை வைத்து எரிப்பது?  யோசனை செய்தவருக்கு பிசுக்கேறிய தனது நீண்ட தலைமுடி நினைவுக்கு வந்தது. குடுமியை அவிழ்த்துவிட்டார். தலையை விளக்கருகில் வைத்துகொண்டு குடுமியை எரிக்கத் தொடங்கினார். உயிர் பயம் இல்லை. விளக்கு எரிய வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான்.

ஈசன் மனம் கனிந்தார். எடுத்த திருத்தொண்டை நிறைவேற்ற தன்னையே திரியாக்கிய பக்தனின் முன் காட்சி தந்தனர் இறைவனும், இறைவியும்.
இறைவன் திருப்பணிக்காகத் தன் தலைக்கேசத்தையே தந்த கணம்புல்லரை கார்த்திகை மாத கார்த்திகை நன்னாளில் தொழுவோம். அவரது முக்தி தலமான சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் கோயிலில் நவ. 26-ஆம் தேதி மாலை கணம்புல்ல நாயனாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com