நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்!

நரசிம்ம அவதாரதை தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகளும் (அரி,  காஷ்யபர்,  வசிஷ்டர், ஜமகனி,  கெüதமர், பரவாஜர், விசுவாமிதிரர்),
நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்!
Updated on
2 min read

நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகளும் (அத்ரி, காஷ்யபர்,  வசிஷ்டர், ஜமத்கனி,  கெüதமர், பரத்வாஜர், விசுவாமித்திரர்), வாமதேவர் என்ற முனிவரும், திருக்கடிகை மலை மீது நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை அறிந்தனர்.  

அவர்கள் அங்கு சென்று நரசிம்மரை வேண்டி ஒரு நாழிகை தவம் புரிந்தபோது, யோக நரசிம்மப் பெருமாள் காட்சி அளித்தார். "கடிகாசலம்'  என்று அழைக்கப்படும் இந்தத் தலத்தில் ஒரு நாழிகை தங்கி இருந்தாலே நமக்கு முக்தியை அளிக்க வல்லது. "கடிகை' என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும். 

"மலைக்கு மேல் விசுவாமித்திரர் 24  நிமிஷங்கள் தவம் புரியவே, வசிஷ்டரே தேடி வந்து பிரம்மரிஷி பட்டத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்'  என்று தல வரலாறு கூறுகிறது.

பெரிய மலைக்கு மேல் அம்ருதவல்லித் தாயாரோடு யோக நரசிம்மராக அருள்பாலிக்கிறார் திருமால். சிறிய மலையிலே சங்கு சக்கரம் 
சகிதம் யோக ஆஞ்சனேயர் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.   
திருக்கடிகை யோக நரசிம்மப் பெருமாளை "அக்காரக்கனி' என்று ஆழ்வார்கள் அழைக்கின்றனர்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர்ப் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே
என்று பாடியுள்ளார் திருமங்கை ஆழ்வார்.

திருமங்கையாழ்வார்,  பேயாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 4 பாசுரங்கள் பாடப் பெற்ற 108 வைணவ தலங்களில் ஒன்று சோளிங்கர். மணவாள மாமுனிகள், எறும்பியப்பா போன்ற வைணவப் பெரியோர்களாலும் இந்தத் தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கிறது.

"யோகத்தில் கண்மூடி இருக்கும் நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண்திறந்து அடியார்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம் உள்ளது.  எனவே, இந்த மாதத்தில் பெருமாளைத் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். 

நாம சங்கீர்த்தனக் குழுக்களும் கார்த்திகை சனிக்கிழமைகளில் சுமங்கலி பூஜை,  திருவிளக்கு பூஜை, கன்யா பூஜை, ஸ்ரீ சுதர்சன யாகம், நாலாயிர திவ்ய பிரபந்த  பாசுர சேவையுடன் ஸ்ரீ ஹரிபந்த சேவையும் நாம சங்கீர்த்தனமும், ததியாராதனையும்  (அன்னதானம்)  இங்கே நிகழ்த்துவதை வழக்கமாகவும் பேறாகவும் கொண்டிருக்கின்றனர்.

இறைவனின் திருமேனி அவயங்களுக்குள் ஒரு போட்டி வந்ததாம்.  அவரது திருவடி, "என்னிடம்தான் பக்தர்கள் சரணாகதி செய்கிறார்கள்.  நான்தான் பெரியவன்' என்றதாம். திருக்கரமோ,  "நான்தான் சரண் அடைபவர்களுக்கு அபயம் அளிக்கிறேன். நானே பெரியவன்' என்றதாம்.  இதுபோல் ஒவ்வொரு அவயமும் போட்டி போட்ட நிலையில், "என் கண்கள் கடாட்சம் புரிவதால்தான் பக்தன் என்னைப் பார்த்து சரணாகதி அடைகிறான். ஆகவே, என்னுடைய கண்களே மற்ற அவயங்களை விட சிறந்தது' என்று பெருமாள் கூறியதாக ஐதீகம்.

அதனால்தானோ என்னவோ  ஸ்ரீ ஆண்டாள், 
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
என்று பாடியுள்ளார். 

நரசிம்மரின் திருக்கண் நோக்குக்கு இலக்காகும் பேற்றினை இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் அவனை சேவித்து நாமும் பெறலாம்.

பேய், பிசாசு, சூனியம் உள்ளிட்ட அநேக பிரச்னைகள் தீர இங்கே வந்து விரதம் கடைப்பிடித்து, பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதுள்ள பெருமாளை வணங்கி வலம் வந்து, தங்கள் பிரச்னைகள் தீர்ந்து மகிழ்ச்சியுடன் செல்லுபவர்கள் ஏராளம்.  "இத்தலத்தில் ஒருநாள் தங்கினாலும் பீடைகள் தொலைந்து மோட்சம் கிட்டும்' என்று புராணம் கூறுகிறது. 

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிறிய மலையில் வீற்றிருக்கும் யோக ஆஞ்சனேயர் கோயில்  புஷ்கரணியில் நீராடி வணங்கி வர புத்திர பாக்கியம் கிட்டியவர்களும் ஏராளம். இத்தலத்தின் புராணப் பெயர் கடிகாசலம். ஆழ்வார்கள் "திருக்கடிகை'  என்றும், ஆச்சாரியர்கள் "சோளசிம்மபுரம்' என்றும், சைவர்கள் "சோழலிங்கபுரம்' என்றும் சோளிங்கரை அழைக்கின்றனர். அழைக்கிறார்கள்.  நாளை என்பது இல்லாத நரசிம்மனிடத்தில் வேண்டுதலை சமர்ப்பித்து அருள் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com