சோழநாட்டில் உள்ள 40 பெருமாள் கோயில்களில் திருவாலி திருநகரியில் உள்ள அருள்மிகு கல்யாண ரங்கநாதப் பெருமாள் திருமங்கை ஆழ்வார் கோயில் முக்கியமானதாகும். பஞ்ச நரசிம்மர் கோயில்களில் ஒன்றான இங்கு திருமங்கை ஆழ்வார் வாழ்ந்துள்ளார்.
குலசேகராழ்வார், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலாகும். பெரிய பெருமாளும் பூரணமகரிஷியின் பெண்ணாய் அவதரித்த அமிர்தவல்லி நாச்சியாரும் திருமங்கை மன்னனுக்கு நாராயண மந்திரமான மூலமந்திரோபதேசம் செய்தது இங்குதான்.
திருவுண்ணாழி என்ற கருவறைச் சுற்றுடன் 6 திருச்சுற்றுகள் கொண்டது. திருமங்கை ஆழ்வார் தமது பாடல்களில் இத்தலத்தின் சிறப்புகளைக் கூறியுள்ளார். நீர் வளம் மிகுந்துள்ளது இத்தலத்தில்.
விஜயநகர அரசராகிய விருப்பண்ண உடையாரின் 1308}ஆம் ஆண்டு கல்வெட்டு, இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட மானியங்களைக் கூறுகிறது. கிருஷ்ணதேவராயரின் வெற்றிகள், சிவ, விஷ்ணு கோயில்களுக்காக பல வரிவிதிப்புகள் ரத்து செய்யப்பட்டது போன்றவற்றை கல்வெட்டுகளில் இருந்து அறிய முடிகிறது. திருநகரி கிராமமே பெருமாளுக்கு இறையிலியாக விடப்பட்டது.
இந்தக் கோயிலின் பெருமை கருடபுராணத்தில் பில்வாரணிய ஷேத்திரம் என்ற பகுதியில் ருத்ர நாரத ஸம்வாதத்தில் 11}ஆம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதத்திலும் திருவாலி திருநகரி கோயிலில் உற்சவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது அமிர்தவல்லி திருக்கல்யாணமும் நடைபெறும். இங்குள்ள இரண்ய நரசிம்மரை பிரதோஷத்தன்று மாலையில் திருமஞ்சனம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் உள்ளது.
தொடர்புக்கு: 9443884969.