மார்க்கண்டேயரின் தந்தையும் தாயும் தங்கியிருந்து வழிபாடு செய்த கோயில், விதிப்படி பதினாறு வயதுடன் ஆயுளை முடித்துக்கொள்ளவிருந்த மார்க்கண்டேயர் தன் ஆயுளை நீட்டிக்கவும், தீர்க்காயுள் பெறவும் சிவபூஜை செய்த தலம் என்று மணல்மேடு மார்க்கண்டேயர் கோயிலுக்கு பல தல வரலாறுகள் உள்ளன.
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் நீளமான நடைபாதை கூரையிட்டு அழகுற அமைந்துள்ளது. அதையடுத்து மகா மண்டபம், அதில் மார்க்கண்டேயர் சந்நிதி, மருத்துவதி அம்மன் சந்நிதிகள் அமைந்துள்ளன. நடுநாயகமாக மிருகண்டேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. மார்க்கண்டேயர் சந்நிதியில் அவர் வழிபாடு செய்யும் ஐதீகமான சிவலிங்கத் திருமேனி அமைந்துள்ளது. எதிரே மருத்துவதி அம்மன் எளிய வடிவில், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நடுநாயகனமான மிருகண்டேஸ்வரர் வட்ட வடிவ ஆவுடையாராக சிவலிங்கத் திருமேனியில் தேஜஸýடன் காட்சி அளிக்கிறார்.
கருவறைச் சுற்றில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், கஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன. தென் கிழக்கு மூலையில் நவக்கிரகச் சந்நிதி அமைந்துள்ளது.
பங்குனி மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் மார்க்கண்டேயருக்காக சிவன் கங்கையை வரவழைத்த ஐதீகத் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திருமணப் பேறு, குழந்தைப்பேறு வேண்டுவோருக்கும், மரணபயம் நீக்கும் தலமாகவும் இது போற்றப்படுகிறது. இங்கு நடத்தப்படும் சங்காபிஷேகம் குடும்ப நலன், நோய் நீக்கும் என நம்பப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூருக்கு தென் மேற்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில், மணல்மேடு அமைந்துள்ளது.