திருப்பங்கள் தரும் வேலாயுதன்

திருப்பங்கள் தரும் வேலாயுதன்
Updated on
2 min read

ஈரோடு மாநகரின் ஆன்மிகப் பெருமைகளில் முதன்மையாகத் திகழ்வது திண்டல்மலை. வாடிவந்தாலும், நாடி வந்தாலும் அவர்கள் வாழ்வில் திருப்பங்களைத் தந்து நல்வாழ்வு அருள்பவனாக விளங்குகிறான் வேலாயுதன்.

சேர, சோழ, பாண்டிய நாடுகளோடு தொண்டை நாடு, கொங்கு நாடுகளும் சேர்ந்து ஐந்து நாடுகள் தமிழ்நாட்டில் இருந்ததை சங்க இலக்கியங்கள், திருமந்திரம், தண்டியலங்காரம் உள்ளிட்ட நூல்கள் உறுதி செய்கின்றன. கூடுதலாக, "நடுநாடு' இருந்ததை தேவாரப் பதிகங்கள் உறுதி செய்கின்றன. காவிரி, பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகள் சுற்றிலும், உருகுமலை, அத்திமலை, சென்னிமலைகள் அமைந்த நகரமாக ஈரோடு விளங்குகிறது.

இந்தக் கொங்கு நாடானது 24 உள்பிரிவுகளாக விளங்கியது. இதில் முதன்மையானதாக பூந்துறை நாடு திகழ்ந்ததை "மேழி விளக்கம்' என்ற நூல் குறிப்பிடுகிறது. இந்த பூந்துறை நாட்டில் அடங்கிய புதிய தலமே திண்டல்மலை.

நூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குருசாமிப் புலவர் இயற்றிய "திண்டல் வேலாயுத சுவாமி சகாப்தம்' என்ற நூல் இத்தலத்தை புகழ்ந்துரைக்கிறது.

"திண்டி வனம்' என்பதன் பொருள் புளியமரங்கள் நிறைந்த வனப் பகுதியாகும். "திண்டி மரங்கள்' நிறைந்த மலையாக விளங்கியதால் "திண்டிமலை' என வழங்கப்பட்டது.

நாளடைவில் இந்தப் பெயர் மருவி திண்டல் மலையானது. அதுபோல, மலையின் அமைப்பு திண்டு போன்ற வடிவில் அமைந்துள்ளதால், திண்டு + மலை = திண்டல் மலையானதாகவும் கூறுவர்.

மலையடிவாரத்தில் நெடிதுயர்ந்த அரசமரத்தடியில் விநாயகரும், படி மண்டபத்தில் சித்தி விநாயகரும் அமர்ந்துள்ளனர். 108 படிகள் கொண்டு, படியேறும் வழி நெடுக, பக்தர்களின் வசதிக்காக நிழல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மலையின் நடுவில், இடும்பன் சந்நிதியும், அழகிய செயற்கை நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளன.

கொங்கு நாட்டு வழக்கப்படி தீபத்தம்பம் நீண்டுயர்ந்து நிற்கிறது. இங்குதான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

குன்றின் மீது மூன்றுநிலை ராஜகோபுரம் உள்ளது. வலதுபுறம் விநாயகர் சந்நிதி, இடதுபுறம் மூலவர் வேலாயுதசுவாமி சந்நிதிகள் அமைந்துள்ளன. குழந்தை வேலாயுதனாக, குமிழ் சிரிப்புடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்காட்சி வழங்குகிறார்.

திண்டல்மலையில் வடக்கு நோக்கிய வாயில் வழியே கீழிறங்கினால் தன்னாசி முனிவர் வாழ்கிறார். இவரின் சமாதி கோயிலில் காணப்படுகிறது.

கோயிலின் வடகிழக்கில் வற்றாத தீர்த்தச் சுனை அமைந்துள்ளது.

திருமணப் பேறு, காரிய சித்தி, பகை நீக்கல், நோய் நீங்குதல் உள்ளிட்டவற்றுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படும் திரிசதை அர்ச்சனையில் பங்கேற்றால் தீர்வு உண்டு.

"ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவன் கிள்ளி எறிந்தார். ஆனால், அந்தக் கபாலம் சிவனின் கரங்களை விட்டு அகலவில்லை. நாடெங்கிலும் சுற்றித் திரிந்து இன்றைய ஈரோடு பகுதிக்கு வந்தார். இங்குள்ள கபாலி தீர்த்தத்தில் நீராடியபோது, சிவனின் கரங்களில் ஒட்டியிருந்த பிரம்ம கபாலம் உடைந்து வெள்ளோடு, சித்தோடு, பேரோடு என மூன்று இடங்களில் சிதறியது. அவற்றின் பெயர்களே ஒன்றிணைந்து "ஈரோடு' ஆனது' என்று பைரவப்புராணம் கூறுகிறது. ஆனால், வரலாற்றின்படி, பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற இரண்டு ஓடைகளும் சேர்ந்த பகுதியே "ஈரோடை' என வழங்கப்பட்டு, பின்னர் "ஈரோடு' ஆனது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com