ஆயிரத்து 200 ஆண்டுகள் பழைமையான, சோழ மன்னர்கள் கட்டிய சிவன் கோயில், சென்னை விமான நிலையத்துக்கு அருகே திரிசூலம் கிராமத்தில் உள்ளது.
இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மலைகள், நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. அவை சிவனை வணங்குவதாக ஐதீகம். இந்தக் கோயில் பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. திரிசூலநாதர், பிரம்மபுரீஸ்வரராக சிவனும், திரிபுரசுந்தரியாக அம்பிகையும் அருள்பாலிக்கின்றனர்.
சிலகாலம் பூட்டிக்கிடந்த இந்தக் கோயிலை 1956 ஜனவரி 27}இல் கல் குவாரி குத்தகைதாரர் ஒய். குப்புசாமி, ஸ்ரீனிவாச ஐயர் உள்ளிட்டோரால் திறக்கப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தருமை ஆதீன மகா சந்நிதானம், காஞ்சி மகா பெரியவா ஸ்ரீசிருங்கேரி சாரதா பீட ஆச்சாரியர் ஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள், குகானந்த மண்டலியின் ஸ்தாபகர் சிதானந்தநாதர் உள்ளிட்டோர் இங்கு தரிசனம் செய்துள்ளனர். கிருபானந்த வாரியார் தான் உரையாற்றும் பெரும்பாலான மேடைகளில் இந்தக் கோயிலின் புகழை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இங்குள்ள விநாயகருக்கு "நாக யக்நோபவீத கணபதி' என்று பெயர். கேதுவுக்கு அதிபதியான மகா கணபதி இங்கு நாகத்தோடு காட்சி கொடுப்பதால், ராகு, கேது தோஷங்களுக்கு இவரை வழிபட்டால் உடனடியாகப் பலன் கிடைக்கும்.
சிவனின் கர்ப்பக் கிரகம் தூங்கானை மாடமாக அமைந்துள்ளது. அதாவது, அமர்ந்து கொண்டிருக்கும் ஒரு யானையின் பின்புறம் போல் தோற்றம் அளிப்பதற்கு பெயர்தான் தூங்கானை மாடம். இதனை வடமொழியில் "கஜ பிருஷ்ட விமானம்' என்று சொல்வார்கள். சோழர் காலத்துக் கோயில்களில் மட்டுமே இவ்வகை விமானங்கள் காணப்படுகின்றன.
வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் முருகன் அருள்பாலிக்கிறார். மயிலின் தலை முருகனுக்கு இடதுபக்கத்திலும், தோகை வலது பக்கத்திலும் உள்ளது.
முத்துக்குமார சுவாமி சந்நிதியும், நால்வர் சந்நிதியும் முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளன. கோஷ்ட மூர்த்தத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய சந்நிதிகள் அமைந்துள்ளன.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமாக கால்களை வைத்திருப்பதால் இவரை "யோக தட்சிணாமூர்த்தி' என்று அழைக்கிறார்கள். சங்கு, சக்கரங்களுடன் விஷ்ணு துர்கை எழுந்தருள்கிறார். நவகிரக சந்நிதி, பெருமாள் சந்நிதிகளும் இக்கோயிலில் உண்டு. ஸ்ரீனிவாசர் சந்நிதி தென்மேற்கு மூலையில் உள்ளது.
வெளித் திண்ணையில் இருந்த நவகிரக சந்நிதி 1972}இல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது புதிதாக கட்டப்பட்ட நவகிரக மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. அதை தவிர்த்து ஐயப்பன் சந்நிதியும், ஆதிசங்கரர் பாதுகை சந்நிதியும் பிற்காலசேர்க்கையாகும். 1984, 1996, 2008 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. செப். 15}இல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.