பரசுராமர் வழிபட்ட கோயில்..

சென்னையின் அயனாவரத்தில் பரசுராமர் வழிபட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பரசுராமலிங்கேசுவரர் கோயில்..
பரசுராமர் வழிபட்ட கோயில்..
Updated on
1 min read

சென்னை மாநகரில் வழிபாடு சிறப்புமிக்கதும், வரலாற்றுப் பெருமைமிக்கதுமான கோயில்களில் ஒன்றாக அயனாவரத்தில் உள்ள பரசுராமலிங்கேசுவரர் கோயில் விளங்குகிறது. பண்டைய நாளில் இப்பகுதி "அயன்புரம்' என்று அழைக்கப்பட்டது.

"அயன்' என்பது மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவைக் குறிக்கும். வேதத்தின் பொருளை பிரம்மா அறியாததால், அவரை முருகன் சிறையில் அடைத்து தாமே படைப்புத் தொழிலை மேற்கொண்டதாகவும், பிரம்மனான அயன் இத்தல இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொண்டதாகவும் தல வரலாறு குறிப்பிடுகிறது.

கோயிலில் இறைவன் சந்நிதியை அடுத்து தெற்கு நோக்கி முருகன் சந்நிதி அமைந்துள்ளது. முருகன் "பிரம்ம சாஸ்தா' கோலத்தில் தனது கரங்களில் அக்க மாலையும் கெண்டியும் தாங்கி, அழகிய திருமேனியராகக் காட்சியளிக்கிறார். தீர்த்தம் "பிரம்ம தீர்த்தம்' எனப்படுகிறது. கோயிலின் எதிரே திருக்குளம் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய கோயில் வாயிலில் அழகிய கோபுரமும், அடுத்து கொடிமரமும், பலிபீடமும், நந்தியம்பெருமான், விநாயகர், சண்முகரும் காட்சி தருகின்றனர். மற்ற பரிவார சந்நிதிகள் திருச்சுற்றில் அமைந்துள்ளன.

கருவறையில் பரசுராமேசுவரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இவரை "தீண்டாத் திருமேனி' எனப் போற்றுகின்றனர். திருமாலின் தசாவதாரங்களில் பரசுராமர் அவதாரத்தில், தந்தையான ஜமதக்கினி முனிவரின் கட்டளையின்படி தம் தாயாகிய ரேணுகாதேவியைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொள்ள, பரசுராமர் இத்தலத்து இறைவனை வழிபட்டதால், "பரசுராமலிங்கேசுவரர்' என அழைக்கப்படுவதாகவும் வரலாறு கூறுகிறது.

இறைவனுக்கு நீர், இளநீர், பன்னீர் ஆகிய மூன்றால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற பொருள்களால் சதுரவடிவமான ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறுகிறது. அர்ச்சகரின் கரங்களும்கூட லிங்கத்திருமேனியை தீண்டாது என்பது சிறப்பு. இறைவனது கருவறை தொண்டை நாட்டுக்கே உரிய தூங்காணை மாட வடிவில் அமைந்துள்ளது. மேலும் வடக்குத் திருச்சுற்றில் பட்டீசுவரர் என்ற லிங்கத் திருமேனியும் வழிபாட்டில் உள்ளது.

அம்பாள் "பர்வதாம்பிகை' என அழைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அம்பாள் முன்பு ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் உள்ளது. திருச்சுற்று வலம் வரும்பொழுது சுவாமி } இறைவியையும் சேர்த்தே வலம் வரவேண்டும். திருமணக் கோலத்தில் இருவரும் காட்சி தரும் அமைப்பில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com