

கிராம தேவதைகள், அதிதேவதைகள் வழிபாடுகள் கிராமங்களில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. வேண்டிய வரங்களை அருளி, பிரச்னைகளைத் தீர்க்கும் கிராம தேவதைகளை உலகில் எவரும் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் வழிபடத் தவறுவதில்லை. அப்படியொரு பிரசித்தி பெற்றுவிளங்கும் கிராம தேவதைகளில், அருள்மிகு ஸ்ரீமுத்தாலம்மன் என்கிற முத்துமாரியம்மனும் அடக்கம்.
400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கற்கோயிலான இந்தக் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட கீழ்க்கொடுங்காலூரில் உள்ளது. சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், மன்னர்கள் காலத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது கிராம மக்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதுப்பொலிவுடன் விளங்குகிறது.
அத்தி மரத்தாலான மூலவர் அம்மன், சமயபுரம் மாரியம்மனைப் போன்ற தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
இங்கு திருமணம் கைகூட வேண்டியும், பிள்ளைப் பேறு வேண்டியும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாட்டை மேற்கொள்கின்றனர். ஆடி, தை மாதங்களில் ஊரணிப் பொங்கல் விழாவை பல்வேறு கிராம மக்களும் இணைந்து ஒன்றுகூடி நடத்துகின்றனர். ஆடி மாதத்தில் திருவிளக்குப் பூஜையில், வரங்கள் வேண்டியும், வேண்டிய வரங்களை அளித்த அம்மனுக்கு நன்றியையும் பெண்கள் செலுத்துகின்றனர். அம்மாவாசைதோறும் நடைபெறும் ஊஞ்சல் சேவையில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபடுகின்றனர்.
கோயிலில் அளிக்கப்படும் தீர்த்தம் அம்மை நோயைத் தீர்க்கும் அருமருந்தாகும்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் தைப்பூசத் தெப்பத் திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்டவை பிப். 6}இல் நடைபெறுகிறது. அன்று நோய்களைத் தீர்க்க அம்மனை வேண்டி பொம்மைகள் வைத்து நடக்கும் வழிபாடு சிறப்புமிக்கது.
- ஜி. கணேஷ்கிரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.