

லண்டன், ஜூலை 14: முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? மனிதன் இறைச்சி சாப்பிடத் தொடங்கிய காலத்திலிருந்தே உருவான கேள்வி இது. ஆனால் இதற்கு விடை கண்டுபிடித்துள்ளனர் லண்டன் ஆராய்ச்சியாளர்கள். முதலில் உருவானது கோழிதான் என்பதே இவர்களது ஆராய்ச்சி முடிவாகும்.
இனி கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது என்ற கேள்விக்கு கோழிதான் என ஆணித்தரமாக பதில் கூற முடியும். இதே கேள்வியை இனிமேலும் கேட்டு போரடிக்க வேண்டியிருக்காது.
லண்டனில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம் மற்றும் வார்விக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், முட்டையின் மேல் ஓடு உருவாவதில் ஓவல்சிடின் எனப்படும் காரணி (ஓசி-17) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது பெரும்பாலும் கோழியின் கருப்பையில் உருவாகும். எனவே கோழிதான் முதலில் உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களது கண்டுபிடிப்பை நிரூபிப்பதற்காக முட்டை ஓட்டில் உள்ள மூலக்கூறு வடிவமைப்பை கம்ப்யூட்டர் வரை படம் மூலம் உருவாக்கியுள்ளனர். இதில் ஓசி-17 மூலக்கூறு கால்சியம் கார்பனேட் உருவாகக் காரணமாகிறது. இது கோழியின் வயிற்றில் கால்சியம் துகள்களாக உருவாகிறது. இந்த ஓடு உருவானபிறகுதான் முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு உருவாகிறது என்று ஷெஃபீல்ட் பல்கலைக் கழக பேராசிரியர் கோலின் ஃபிரீமேன் தெரிவித்துள்ளார். முட்டைதான் முதலில் உருவாகியிருக்கும் என இவ்வளவு காலம் நம்பப்பட்டது. ஆனால் இந்த ஆராய்ச்சியின் மூலம் கோழிதான் உருவானது என்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.