கெய்ரோ: சிறை உடைப்பு தொடர்பான வழக்கில் எகிப்தின் முன்னாள் அதிபர் மோர்சிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எகிப்தின் அதிபராக முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்து விட்டு பதவியைப் பிடித்தவர் முகமது மோர்சி(63).
ஆனால் இவர் ஓராண்டுக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்கவில்லை. எகிப்தின் ராணுவத் தளபதியாக இருந்த அப்டெல் சிசி என்பவர், சதி செய்து மோர்சியை பதவியிலிருந்து நீக்கினார். பின்னர் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் போது, சிறை உடைப்பு செய்தது தொடர்பான வழக்கில் மோர்சிக்கு கடந்த ஆண்டு மே மாதம் 16-ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எகிப்து நாட்டின் தலைமை கோர்ட்டில் மோர்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிமன்றம் முஹம்மது மோர்சிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணையை மீண்டும் முதலில் இருந்து தொடங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.