
அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய சிஐஏ 638 முறை முயற்சித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் சிஐஏ உளவு நிறுவனம், கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை தீர்த்துக் கட்டுவது ஒன்றே வழி என்று முடிவு செய்து, தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.
நாட்டு மக்களுடன் ஃபிடல் காஸ்ட்ரோ அவ்வப்போது வானொலியில் உரையாற்றுவார். அப்போது அவர் பேசும் மைக்கில் ரசாயன பவுடரை தூவலாமா என்று கேட்டு சிஐஏ அதிகாரி உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிய வந்தது. ஆனால் அந்த யோசனையை செயல்படுத்தவில்லை.
மேலும், அவர் பிடிக்கும் சுருட்டில் விஷச் சுருட்டை மாற்றி வைத்துக் கொல்லவும் முயற்சி நடந்தது.
அவரது காலணியில் விஷ ரசாயனத்தை தெளிக்கவும், விமான விபத்தை ஏற்படுத்தி கொல்லவும் சிஐஏ முயற்சித்தது.
கார் விபத்தை ஏற்படுத்திக் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டு, கியூபாவைச் சேர்ந்த ஒரு நபரை மூளைச் சலவை செய்து தயார் செய்தனர். ஆனால், இந்த திட்டம் நிறைவேறவில்லை.
இதுபோல நூற்றுக்கணக்கான கொலை முயற்சி சதியை சிஐஏ திட்டமிட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தால் நிறைவேறாமல் போனது.
இறுதியாக ஃபிடல் காஸ்ட்ரோவின் காதலியை வைத்து கொலை செய்ய சிஐஏ திட்டமிட்டு, அவரை சம்மதிக்கவும் வைத்தது.
இது பற்றி அறிந்து கொண்ட ஃபிடல் காஸ்ட்ரோ, தனது காதலியின் கையிலேயே துப்பாக்கியைக் கொடுத்து தன்னை மறைமுகமாக வஞ்சித்துக் கொல்ல வேண்டாம், துப்பாக்கியால் சுட்டு வீர மரணத்தைக் கொடு என்று கேட்டுக் கொண்டார். துப்பாக்கியை வீசி எறிந்து கதறி அழுதார் அவரது காதலி.
இதுபோல ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய வேண்டும் என்று சிஐஏ செய்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மக்களின் ஏகோபித்த அன்பு, அவரது உயிருக்கு கவசமாக விளங்கியது என்று சொன்னால் அது மிகையில்லை.
இறுதியாக, வயது முதிர்வு காரணமாக ஃபிடல் காஸ்ட்ரோ இன்று தனது 90வது வயதில் இயற்கை மரணம் எய்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.