
ரியாத்: இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் ஓட்ட சவுதி அரேபியப் பெண்களுக்கு இனி அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாட்டு போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் முக்கியமான ஒரு நாடு சவுதி அரேபியா. இங்கு வாகனங்களை ஓட்டுவதற்கு பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசர் சல்மான் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பில் இருசக்கர வாகனங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், இரு சக்கர வாகனங்களையும் சவுதி அரேபிய பெண்கள் இயக்கலாம் என்று அந்நாட்டின் தலைமை போக்குவரத்து இயக்குனரகம் தற்பொழுது அறிவித்துள்ளது. இது பற்றிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சவுதி அரேபிய பெண்கள் இனி இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் போன்ற வாகனங்களை ஓட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும். ஆண், பெண் இருபாலரும் சரிசமம் என்பதன் அடிப்படையில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்கள் ஓட்டும் இருசக்கர வாகனங்களுக்கு என தனிப்பட்ட முறையில் நம்பர் பிளேட் வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. ஆனால் சாலை விபத்துகளுக்கு காரணமாக அமையும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க பெண்களால் நடத்தப்படும் விசாரணை மையங்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.