பியூனஸ் அயர்ஸ்: தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று 44 வீரர்களுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளிலொன்று அர்ஜென்டினா. அந்நாட்டு கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி ரோந்து கப்பலான சான்ஜூ யர்னஸ், இரு நாட்களுக்கு முன்னால் மார்டெல் பிளாடா கடற்படைத் தளப் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
அந்த கப்பலில் பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 44 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக அந்தக் கப்பலைத் தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நிலவிய மோசமான தட்ப வெப்பநிலையின் காரணமாக கப்பல் மாயமாகி இருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மூன்று நாட்களாக நீடிக்கும் தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ,அக்கப்பலில் உள்ள 44 பேர்களின் கதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.