பிச்சையெடுப்பது குற்றமாகக் கருதப்படும் துபாயில், பிச்சையெடுத்து மாதந்தோறும் ரூ.45,47,000 சம்பாதித்த பிச்சைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் பிச்சையெடுப்பது சட்டப்படிக் குற்றம். எனவே, துபாய் நகராட்சி ஆய்வாளர்கள் கொண்ட குழு, துபாயில் பிச்சையெடுக்கும் நபர்களை கைது செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது.
சட்டத்துக்கு விரோதமாக பிச்சையெடுத்து வந்த நபர்கள் கைது செய்யப்பட்ட போது காவல்துறையினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஒரு பிச்சைக்காரரிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டது. விசாரணையில், அவர் பிச்சையெடுப்பதன் மூலம் மாதந்தோறும் ரூ.45,47,000 அளவுக்கு சம்பாதித்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து நகராட்சி ஆய்வாளர் ஃபைசல் அல் கூறுகையில், முதற்கட்ட நடவடிக்கையாக 59 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
துபாய் நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் எமிரேட்ஸ் காவல்துறை இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில், பிச்சைக்காரர்கள் பற்றிய பல தகவல்கள் வெளியாகின.
துபாயில் பிச்சையெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பல பிச்சைக்காரர்களிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் சுற்றுலா விசாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 மாத கால விசா பெற்று நாட்டுக்குள் நுழைந்த பலர், பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஏராளமான பிச்சைக்காரர்களை ஒரே நேரத்தில் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் இருந்த இடத்தில் குவியல் குவியலாக பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனால்தான் பிச்சையெடுப்பது பல நாடுகளில் குற்றமாகவேக் கருதப்படுகிறது என்பதும், இதற்கு கடும் தண்டனை வழங்கப்படுவதும் சரிதான் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.