நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என். நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சி.என்.என் பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக நியூயார்க் உட்பட பல்வேறு இடங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர் அலுவலக கட்டிடத்தில் ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து நிறுவன ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீ தடுப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டு, அவர்கள் அலுவலகம் முழுவதும் சல்லடை போட்டு தேடிய பின்னர், இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.