நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிறையிலிருந்தே மேலும் 2 ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்படவுள்ளன.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃபும் (68), அவரது குடும்பத்தினரும் வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கிக் குவித்ததாக பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், பிரதமர் பதவியில் இருந்து அவரை தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
லண்டனில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், இஸ்லாமாபாதில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதில் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓர் ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், நவாஸுக்கு ரூ.68 கோடி அபராதமும், மரியத்துக்கு ரூ.17 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனிடையே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக தங்கியிருந்த நவாஸ் அவரது மகள் மரியம், லாகூருக்கு திரும்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். மேலும், இருவரது கடவுச் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பஷீர் உத்தரவையடுத்து, ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மீதமுள்ள 2 வழக்கு தொடர்பான விசாரணையும் சிறையிலேயே நடைபெறும் என்று பாகிஸ்தான் ஊழல் தடுப்புப் பிரிவு ஆணையம் தெரிவித்துள்ளது.