படுகொலை செய்யப்பட்ட மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாஸீர் பூட்டோவின் மகள்கள் அங்கு நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் வாக்களித்தனர்.
கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் தற்போது தான் 2-ஆவது முறையாக பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சுமார் 106 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அங்கு எந்தவொரு பிரதமரும் இதுவரை 5 ஆண்டுகள் வரையிலான தனது முழு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்தது கிடையாது.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் பெனாஸீர் பூட்டோவின் மகள்கள் பக்தவார் பூட்டோ சர்தாரி மற்றும் அசீஃபா பூட்டோ சர்தாரி ஆகியோர் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் இருவரும் வாக்களித்த மையுடன் செல்ஃபீ வெளியிட்டனர்.
அதில், பிடிஐ கட்சித் தலைவர் இம்ரான் கான் குறித்து கடுமையாகச் சாடியுள்ளனர். பாகிஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய தடையாக இருப்பது இம்ரான் கான் தான் எனவும், அவர்தான் கடந்த 2006 முதல் தற்போது 2016 வரை அதை தாக்கல் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும், தற்போது தாலிபன் ஆட்சிமுறையை ஏற்படுத்த முனைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாகிஸ்தானில் பெண்களுக்கான ஜனநாயகம் வெற்றிபெற வேண்டும் எனவும் அதில் பதிவிட்டுள்ளனர்.