டாக்கா: ரோஹிங்கயா இஸ்லாமியர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
மியான்மரில் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு அஞ்சி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஃஹின் மாகாணத்தில் இருந்து சுமார் 7 லட்சத்து 23 ஆயிரம் ரோஹிங்கயா இஸ்லாமியர்கள், எல்லை தாண்டி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.
பின்னர் சர்வதேச சமூகத்தின் தலையீட்டுக்குப் பிறகு மியான்மரில் ரோஹிங்கயா இஸ்லாமியர்கள் மீதான ராணுவத்தினரின் தாக்கல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதியன்று, வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கயா இஸ்லாமியர்களை மீண்டும் நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொள்ளும் வகையில், இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி முதல் கட்டமாக வியாழனன்று குறிப்பிட்ட அள்வு ரோஹிங்கயா இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டிய நாளாகும்.
இந்நிலையில் ரோஹிங்கயா இஸ்லாமியர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மியான்மரின் எல்லைப் பகுதியான காக்ஸ் பஜார் பகுதியில், செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேசத்தின் நிவாரணம் மற்றும் நாடு திரும்புதல் பிரிவு ஆணையரான அப்துல் கலாம் கூறியதாவது:
ஏற்கனவே திட்டமிட்டபடி ரோஹிங்கயா இஸ்லாமியர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். வாகன ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேநேரம் ரோஹிங்கயா இஸ்லாமியர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவது சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது என்றும், இதன் மூலம் அவர்கள் மீண்டும் ஆபத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்களென்றும் சர்வதேச பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.