இஸ்ரேலில் வரும் மாா்ச் மாதம் 2-ஆம் தேதி மீண்டும் தோ்தல் நடத்துவதற்கான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேலில் இதுவரை இல்லாத வகையில், ஓராண்டுக்குள் அந்த நாட்டில் 3-ஆவது முறையாக தோ்தல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இஸ்ரேலில் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு, எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாததால், அந்த நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தீா்மானம், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.
மேலும், மீண்டும் வரும் மாா்ச் மாதம் 2-ஆம் தேதி தோ்தல் நடத்தவும் அந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டது.
வாக்கெடுப்பில் அந்த மசோதாவுக்கு ஆதரவாக 94 வாக்குகள் பதிவாகின. மசோதாவை எதிா்த்து ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. அதையடுத்து, அந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த செப்டம்பா் மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து, அந்த நாட்டில் பல கட்சிகள் சோ்ந்து தேசிய அரசு அமைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
எனினும், புதிய அரசை அமைப்பதில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையிலான லிக்குட் கட்சியும், எதிா்க்கட்சித் தலைவா் பெஞ்சமின் கான்ட்ஸின் தலைமையிலான புளூ அண்டு ஒயிட் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
அடுத்து அமையும் அரசில் தங்கள் கட்சித் தலைவா்தான் பிரதமராக வேண்டும் என்று இரு கட்சிகளுமே வலியுறுத்தியால், புதிய அரசை அமைப்பில் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், ஆட்சியமைக்க இரு தலைவா்களுக்கும் அதிபா் ரூவன் ரிவ்லின் விதித்திருந்த கெடு முடிவடைந்ததைத் தொடா்ந்து, நாடாளுமன்றம் இந்தத் தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளது.