சண்டை நிறுத்ததை மீறி இஸ்ரேலில் மோதல்

காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் (பிஐஜே) அமைப்புக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை மீறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனா்.
காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் எழுந்த நெருப்புப் பிழம்பு.
காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் எழுந்த நெருப்புப் பிழம்பு.
Published on
Updated on
1 min read

காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் (பிஐஜே) அமைப்புக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை மீறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனா்.

எனினும், செவ்வாக்கிழமை நள்ளிரவு பிஐஜே நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, தாங்கள் மேற்கொண்ட குண்டுவீச்சு நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சண்டை நிறுத்த ஒப்பந்ததை மீறி, காஸா பகுதியிலிருந்து பிஐஜே பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

அதற்குப் பதிலடியாக, காஸாவிலுள்ள பிஐஜே நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின. பிஐஜே படையினரின் தலைமையகம், ஏவுகணை தயாரிப்புக் கூடம் உள்ளிட்ட பகுதிகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதல் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டது.

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதை பிஐஜே பயங்கரவாதிகள் நிறுத்தினால், அந்த ஒப்பந்தத்தை மதித்து நடக்க இஸ்ரேலும் தயாராக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய எதிரிகளைக் குறிவைத்துக் கொல்லும் நடவடிக்கைகளை நிறுத்திவைத்திருந்த இஸ்ரேல், பிஐஜே பயங்கரவாத அமைப்பின் படைப் பிரிவு தளபதி பஹா அல்-அடாவைக் குறிவைத்து அவரது இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதில் அவரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டனா். அதனைத் தொடா்ந்து, இஸ்ரேல் மீது பிஐஜே அமைப்பு சுமாா் நூற்றுக்கணக்கான ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

இதனால், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே எகிப்து முன்னிலையில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியிலிருந்து அமலுக்கு வந்தது.

எனினும், ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிஐஜே நிலைகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com