காஷ்மீரில் படுகொலை நடப்பதாகக் குற்றம்சாட்டும் பாகிஸ்தானிடம் இந்தியாவுக்கு எதிராக போதிய ஆதாரமில்லை என்று சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்குரைஞர் கவார் குரேஷி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு வந்து இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று தீவிரமாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்த தகவல் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சர்வதேச நீதிமன்றத்துக்கான பாகிஸ்தான் வழக்குரைஞர் கவார் குரேஷி கூறுகையில், காஷ்மீரில் இந்தியா படுகொலையில் ஈடுபடுவதாகக் கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
போதிய ஆதாரங்கள் இல்லாததால் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் கொண்டு வந்தாலும் அதனை நீதிமன்றம் ஏற்காது என்றும் குரேஷி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக மாற்றி, அதனை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப் போவதாக சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கான வழக்குரைஞரின் பேச்சு இம்ரான் கானுக்கு பலத்த அடியாகவே கருதப்படுகிறது.