இஸ்லாமாபாத்: கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட பாகிஸ்தானிய ஹிந்துப் பெண் ரெனோ குமாரி வீடு திரும்பினார்.
பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்து பெண் ஒருவர் இஸ்லாமிய நபரால் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த வாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்யப்பட்டது கூடுதலாக புயலைக் கிளப்பியது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களின்படி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் ரெனோ குமாரி என்ற பெண் ஆகஸ்ட் 29-ஆம் தேதி சிந்து மாகாணத்தில் ரோகரி நகரில் இருந்து தான் படிக்கும் கல்லூரிக்குச் செல்லும்போது கடத்தப்பட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் அந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் மகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றதிற்கு உள்ளாகி,திருமணம் செய்து வைக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து சிந்து மாகாண ஹிந்து மத அமைப்பினர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்தினர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கடத்தப்பட்ட பெண்ணை உடனடியாக அவரது வீட்டிற்கு அனுப்ப பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண் புதனன்று அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.