பிரெக்ஸிட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வடக்கு அயர்லாந்து நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் பிரெக்ஸிட் கொள்கை, அயர்லாந்து அரசுடன் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த பெல்ஃபாஸ்ட் நகர உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் சர்வதேச அரசியல் தொடர்பானது எனவும், அதற்கும் நீதித்துறைக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தது.
பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்து பகுதிக்கும், ஐரோப்பிய யூனியனின் அங்கமாகத் திகழும் அயர்லாந்து நாட்டுக்கும் இடையே, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் தொடர வேண்டிய வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பாக, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.