கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை வரிகளை குறைப்பேன் என்ற வாக்குறுதியுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
கனடாவில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், தற்போதைய பிரதமர் ட்ரூடோவின் லிபரல் கட்சியும், எதிர்தரப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியும் பிரதான கட்சிகளாக களத்தில் உள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளை கவர்வதில் போட்டி போட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வரிகளை குறைப்பேன் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அவர் இந்த வாக்குறுதியை கனடாவின் மத்திய மாகணமான ஒன்டாரியோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வழங்கினார்.
அதன்படி, 11,300 டாலர் வரை வருவாய் ஈட்டும் நடுத்தர மக்கள் இனி வரி செலுத்த தேவையில்லை என்று ட்ரூடோ அறிவித்துள்ளார். மேலும், செல்லிடப்பேசி திட்ட செலவுகளை 25 சதவீதம் குறைப்பாதகவும் அவர் கூறியுள்ளார்.
அக்டோபரில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 32.9 சதவீத மக்களும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 34.6 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, கருப்பினத்தவர் போல வேடமணிந்த ட்ரூடோவின் பழைய புகைப்படங்கள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
ஓர் இனத்தை கேலி செய்யும் வகையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக பிரதமர் ட்ரூடோ மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்ட ட்ரூடோ யாரையும் புண்படுத்தும் நோக்கில் தாம் அவ்வாறு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமது அரசு பன்முகத்தன்மையை காப்பதற்காகவும், இனவெறி மற்றும் சகிப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருவதாகவும் கூறியுள்ளார்.