கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்திய மதகுரு விடுதி குண்டுவெடிப்பில் மரணமடைந்து விட்டதாக, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா உறுதி செய்துள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 353 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 50-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர். 18 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது
நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாகவும், கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் மசூதிகள் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன செவ்வாயன்று தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வியாழனன்று தற்கொலைப்படைத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒன்பது பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் படித்தவர்கள் என்பதும், அவர்களை மூளைச்சலவை செய்து இந்த கொடூர செயலுக்கு பயன்படுத்தியுள்ளனர் என்று அமைச்சர் ருவான் விஜேவர்தன தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை தொடர் குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்திய மதகுரு விடுதி குண்டுவெடிப்பில் மரணமடைந்து விட்டதாக, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா உறுதி செய்துள்ளார்.
தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த மதகுரு ஜக்ரான் ஹசீம் தேடப்பட்டு வந்தார். தற்போது நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், ஷாங்ரி லா விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் அவர் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அதிபர் சிறீசேனா தெரிவித்து உள்ளார்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்தியவராக கருதப்படும் மதகுரு ஜக்ரான் ஹசீம், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார் என்று கூறப்படுகிறது.